Published : 07 Oct 2015 11:29 AM
Last Updated : 07 Oct 2015 11:29 AM

சினிமா எடுத்துப் பார் 29- சிம்மக்குரலோன் சிவாஜி கணேசன்!

அண்ணன் சிவாஜி கணேசன் நடித்து நான் இயக்கிய முதல் படம் ‘கவரிமான்’. பஞ்சு அருணாசலமும், பெங்களூரு பி.எச்.ராஜன் னாவும் இணைந்து தயா ரித்த படம். கதை -வசனம் எழுதியது பஞ்சு அருணா சலம். சிவாஜி கதையைக் கேட்டார். ‘‘கதை நல்லா இருக்கே…’’ என்று பஞ்சுவைப் பாராட்டினார். அந்த சந்தோஷத்தோடு படத்தின் மற்ற நடிகர், நடிகைகளைத் தேர்வுசெய்து படப்பிடிக்கான தேதியையும் முடிவு செய்தோம். இதற்கிடையில் அப்போது நான் இயக்கி வந்த ‘ப்ரியா’ படத்தின் படப்பிடிப்புக்காக மலேசியா, சிங்கப்பூர் சென்று படப்பிடிப்பை முடித்துத் திரும்பினோம்.

சென்னைக்குத் திரும்ப சிங்கப்பூரில் இருந்து நேரடியாக விமான டிக்கெட் கிடைக்கவில்லை. கொழும்பு வழியாக டிக்கெட் கிடைத்தது. நானும், ஒளிப் பதிவாளர் பாபுவும் கொழும்புக்கு வந்து கொழும்பில் இருந்து சென்னைக்கு வேறு விமானத்தில் புறப்பட்டோம். அந்த விமானம் வானில் பறக்க ஆரம்பித்த 10 நிமிடங்களில் மீண்டும் கொழும்பு விமான நிலையத்துக்கே திரும்பியது. விமானத்தில் ஏதோ கோளாறு என்று அறிவித்தார்கள்.

பொறியாளர்கள் பலரும் கூடி விமானத்தின் றெக்கை மீது பெரியப் பெரிய புத்தகங்களை விரித்து வைத்துக்கொண்டு படித்துப் படித்து பழுது பார்த்தார்கள். இது சரி வருமா என்று சிலர் பேசிக்கொண்டார்கள். ஒருசிலர் விமான டிக்கெட்டை கேன்சல் செய்துவிட்டு புறப் பட்டார்கள். எங்களுக்கு பயம் தொற்றிக்கொண்டது.

நாளை காலை சிவாஜி அவர்கள் நடிக்கும் ‘கவரிமான்’ படத் தின் முதல் நாள் படப்பிடிப்பு. சரியான நேரத்துக்கு போய் சேர வேண்டுமே என்ற பரப்பரப்பு எங்களைப் பற்றிக்கொண்டது. ஒரு மணி நேரத்துக்குப் பிறகு கோளாறு சரிசெய்யப்பட்டு விமானம் புறப்படத் தயாரானது. விமானத்தில் ஒரே நிசப்தம். எல்லோரும் அவரவர் கடவுளைக் கும்பிட்டுக்கொண்டனர். விமானம் தரை இறங்கியதும்தான் எங்களுக்கெல்லாம் உயிர் வந்தது.

அண்ணன் சிவாஜிகணேசன் ‘கவரி மான்’ முதல் நாள் படப்பிடிப்பில் என்னை அழைத்து, ‘‘முத்து என்ன வேணும் னாலும் கேள். எதற்கும் தயங்காதே!’’ என்று தைரியம் கொடுத்தார். சிவாஜி எப்போதுமே வசனம் எழுதிய பேப் பரை வாங்கிப் படிக்க மாட்டார். காட்சிக் குரிய வசனத்தை ஒருமுறை படிக்கச் சொல்வார். அதை அப்படியே உள் வாங்கிக்கொண்டு, ‘‘சரி… நீ போ’’ என்று கூறிவிடுவார். நானும், ஒளிப்பதிவாளர் பாபுவும் படப்பிடிப்புக்கான மற்ற வேலை களில் ஈடுபட்டிருப்போம். திரும்பிப் பார்த்தால் சிவாஜி நம்மிடம் கேட்ட வசனங்களை முணுமுணுத்துக் கொண்டே வெவ்வேறு விதமாக நடித்துப் பார்ப்பார்.

‘‘முத்து…’’ என என்னை அழைத்து, ‘‘நான் நடிச்சுக் காட்டுறேன் பாரு’’ என்பார். ‘‘அண்ணே… நீங்க நடிச்சுக் காட்டணுமா?’’ என்று கேட்டால், ‘‘உனக் குத்தானே தெரியும் இதற்கு முன்னால உள்ள காட்சி எப்படி இருந்தது? இந்தக் காட்சி எப்படி இருக்கணும்’’னு என்று கூறி இரண்டு, முன்று விதமாக நடித்துக்காட்டுவார். ‘‘கடைசியா செய் தது நல்லா இருக்குண்ணே’’ என்று சொன் னதும், அதே முறையில் நேர்த்தியுடன் நடித்துக்கொடுப்பார்.

அது, அவர் எஸ்பி.முத்துராமனுக்குக் கொடுக்கும் மரியாதை அல்ல; ஓர் இயக்குநருக்கு கொடுக்கும் மரியாதை! எவ்வளவு பெரிய கதாபாத்திரமாக இருந்தாலும், எத்தனை பக்க வசனமாக இருந்தாலும் அவ்வளவு ஈடுபாட்டோடு அண்ணன் சிவாஜி அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டுவார். அதுதான் அவர் தொழிலுக்குக் கொடுத்த மரியாதை.

பாடல் காட்சி ஒன்றை படமாக்கத் திட்டமிட்டோம். இளையராஜா இசையில் ‘பிறவா பிரம்மா…’ என்று தொடங்கும் கீர்த்தனைப் பாடல். அதை ஜேசுதாஸ் அருமையாக பாடியிருந்தார். படத்தில் சிவாஜி குடும்பத்துடன் பாடுவதுபோல காட்சி. அந்த ஆடியோ டேப்பையும், பாடலையும் எடுத்துக்கொண்டு அண் ணன் சிவாஜியைப் பார்க்க வீட்டுக்குச் சென்றேன். ‘

‘ஜேசுதாஸின் பாடலில் ஆலாபனை, சங்கதிகள் எல்லாம் வித்தி யாசமாக வந்திருக்கு. நீங்க ஒருமுறை கேட்குறதுக்காகக் கொண்டு வந்திருக் கேன்?’’ என்றேன். பலமாக சிரித்தவர், ‘‘முத்து… லிப் மூவ்மெண்ட்ஸ் எல்லாம் சரியா வரணும்னு நான் ஒத்திகை பார்க்குறதுக்காகக் கொண்டு வந்திருக் கியா? நீ எடிட்டரா இருந்து இயக்குநர் ஆனவனாச்சே. நாளைக்கு ஷூட்டிங்ல நீ சரியா பார்த்துக்க’’ என்று கூறினார். மறுநாள் ஷூட்டிங்கில், ஒரு மனிதன் உண்மையாக பாடினால் அந்த பாவனைக்குத் தகுந்த மாதிரி எப்படி அவருடைய நரம்புகள் துடிக்குமோ அப்படி படப்பிடிப்பில் அண்ணன் சிவாஜிகணேசனின் லிப் மூவ்மெண்ட்ஸ் இருந்தது.

அந்தப் பாட்டை ஜேசுதாஸ் பாடினாரா… சிவாஜிகணேசன் பாடி னாரா என்ற சந்தேகமே வரும். பாடல் காட்சி படமாக்கி முடிந்ததும், ‘‘என்ன முத்து சரியா பாடுறேனா?’’ என்றார். ‘‘நூற்றுக்கு இருநூறு சதவீதம் சரியா இருக்குண்ணே’’ என்று கூறி மகிழ்ந்தேன். அப்போது சிவாஜி அவர்கள் சின்ன வயதில் நாடகத்தில் நடிக்கும்போது வசனம், பாட்டு, நடனம் இதையெல்லாம் சரியாக செய்யவில்லை என்றால் பிரம்பால் அடிப்பார்களாம். ‘‘அந்த நாடகப் பயிற்சிதான் எங்களை வாழ வைக்கிறது’’ என்று நினைவுகூர்ந்தார். நாடகப் பயிற்சி பெற்று சினிமாவில் நடிக்க வந்த நடிகர்கள் அனைவரும் அந்த நாளில் சினிமாவிலும் உச்சியைத் தொட்டார்கள்.

‘கவரிமான்’ படத்தில் சிவாஜிகணே சன் - பிரமிளா ஜோடிக்கு ஒரு பெண் குழந்தை. மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலில் ஒரு பாட்டு. ‘‘பூப்போலே உன் புன்னகையில் பொன் உலகினை கண்டேனம்மா’’ என்று தொடங்கும் பாடல். சிவாஜிகணேசன்- பிரமிளா இருவரும் குழந்தையை வைத் துக்கொண்டு ஆடி ஓடி விளையாடு வதுபோன்ற பாடல் காட்சி. அதனை பெங் களூரில் எடுப்பதென்று முடிவு செய் தோம். மறுநாள் படப்பிடிப்புக்காக முதல் நாள் மாலை யூனிட்டை பெங்களூருக்கு அனுப்பி வைத்தோம்.

அண்ணன் சிவாஜிகணேசன், பிரமிளா, நான், ஒளிப்பதிவாளர் பாபு ஆகிய நால்வரும் மறுநாள் காலை விமானத்தில் போக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல் நாள் மாலை என்னை பார்க்க பரபரப்பாக பிரமிளா வந்தார். ‘‘ஒரு படத்தில் 10 நட்சத்திரங்களோடு நடிக்க வேண்டிய கிளைமாக்ஸ் காட்சியை முடிக்க முடியவில்லை.

அதற்காக இரண்டு நாட்கள் தேவை என்று அந்த இயக்குநர் கேட்கிறார். அதனால் நான் நாளைக்கு பெங்களூர் வரமுடியாமல் இருக்கிறேன். நீங்கள்தான் உதவ வேண்டும்’’ என்றார். ‘‘பெங்களூருக்கு யூனிட் போய்விட்டது. என்னால் எதுவும் செய்ய முடியாது. அண்ணன் சிவாஜிகணேசனிடம் போய் விஷயத்தை சொல்வோம்’’ என்று பிரமிளாவுடன் சிவாஜிகணேசன் வீட்டுக்குச் சென் றேன்.

சிம்மக்குரலோன் சிவாஜி கணேசன் என்ன சொன்னார்?

> முந்தைய அத்தியாயம்: சினிமா எடுத்துப் பார் 28 - ‘சிவாஜிக்கு முன், சிவாஜிக்குப் பின்’

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x