Published : 24 Jan 2020 01:11 PM
Last Updated : 24 Jan 2020 01:11 PM

மலையாளக் கரையோரம்: நான்கு தலைமுறையின் பங்கேற்பு!

யுகன்

இசையையும் பரதநாட்டியத்தையும் அடியொட்டி இயக்குநர் சேது இய்யள் மலையாளத்தில் எடுத்திருக்கும் திரைப்படம் ‘சியாம ராகம்’. இந்தப் படத்தின் பிரத்யேகத் திரையிடல், சென்னையில் உள்ள தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் தாகூர் ஃபிலிம் சென்டரில் அண்மையில் நடந்தது.

கர்னாடக இசையைச் சாதி, மத வேறுபாடின்றி அனைவருக்கும் வித்யா தானமாக அளிப்பவர் தமிழகத்துக்கும் கேரளத்துக்கும் இடைப்பட்ட கிராமத்தில் வசிக்கும் ராமநாத பாகவதர். அவரிடம் இசையைப் படிக்க வருகிறான் கிருஷ்ணமூர்த்தி. இவரின் தாய் வேற்று மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் இவரை வீட்டில் தங்கவைத்து இசையைக் கற்றுக் கொடுப்பதற்கு எதிர்ப்பு கிளம்புகிறது.

அதையும் மீறி ராமநாத பாகவதர் அவனுக்குக் கற்றுக் கொடுக்கிறார். கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கையில் ஏற்படும் ஒரு தடுமாற்றம் அவனுடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் அவன் சார்ந்திருக்கும் பலரின் வாழ்க்கையையும் எப்படிப் பாதிக்கிறது என்பதைப் பல விதமான உணர்ச்சிப் போராட்டங்களோடு காட்சிப்படுத்தியிருக்கிறது திரைப்படம்.

இந்தத் திரைப்படத்தில் ராமநாத பாகவதராக முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் ஒய்.ஜி.மகேந்திரா. அவரை இந்தக் கதாபாத்திரத்துக்கு இயக்குநரிடம் பரிந்துரைத்தவர் பிரபலப் பாடகர் கே.ஜே.யேசுதாஸ். பிரபல இசையமைப்பாளர் வி.தட்சிணாமூர்த்தி சுவாமிகள் இசையமைத்த கடைசி திரைப்படம் இது. இந்தப் படத்தில் அகஸ்டின் ஜோசப் (கே.ஜே.யேசுதாஸின் தந்தை), கே.ஜே.யேசுதாஸ், விஜய் யேசுதாஸ், அமேயா விஜய் என ஒரு குடும்பத்தின் நான்கு தலைமுறையைச் சேர்ந்தவர்களின் குரல் பின்னணிப் பாடலில் ஒலிக்கிறது. இப்படிப் பல சிறப்புகளைக் கொண்ட ‘சியாம ராகம்’ திரைப்படத்தின் சிறப்புத் திரையிடலுக்கு கே.ஜே.யேசுதாஸும் வந்திருந்தார்.

“நம்முடைய கலாச்சாரம், பண்பாட்டின் வேர்களாக இருப்பவை கர்னாடக இசை, பரதநாட்டியம் போன்ற நம்முடைய கலைகள். இவற்றை மையமாக வைத்து திரைப்படம் எடுப்பதற்கு ஒரு தைரியம் வேண்டும். அந்தத் தைரியம் இயக்குநருக்கு இருக்கிறது. ஜப்பானில் குறிப்பிட்ட ஓர் இசைக் கருவியைத் தயாரிப்பதற்குப் பல சலுகைகளை அரசு வழங்குகிறது.

செலவாகிறது என்பதற்காகக் கலை, பண்பாட்டைக் காக்காமல் இருக்க முடியுமா? கர்னாடக இசையைப் பல சிரமங்கள் போராட்டத்துக்குப் பின்தான் கற்றுக் கொள்ள முடியும். இதைக் குருவின் மூலமாகப் படிக்க வேண்டும் என்பதைச் சொல்லும் திரைப்படம். எல்லோரும் பார்த்துப் பயன் அடையும் வகையில் விரைவில் வெளிவர வேண்டும்” என்றார் யேசுதாஸ்.

“‘சங்கராபரணம்’ திரைப்படம் பார்த்து அசந்துபோனவன் நான். அப்படிப்பட்ட எனக்கு ஒரு பாகவதராக நடிக்கும் வாய்ப்புக் கிடைத்ததற்கு யேசுதாஸ்தான் காரணம். இந்தப் படத்தில் நானே மலையாளம் பேசி நடித்திருக்கிறேன்" என்றார் ஒய்.ஜி.மகேந்திரா.

“இசையின் பின்னணியோடு ஒலிக்கும் காதல் கீதம்தான் திரைப்படத்தின் மையம். உலகத்திலேயே ஒரு குடும்பத்தின் நான்கு தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்குக் குருவாக இருந்த பெருமைக்கு உரியவர் இத்திரைப்படத்துக்கு இசையமைத்திருக்கும் வி.தட்சிணாமூர்த்தி சுவாமி. நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகை சாந்தி கிருஷ்ணா இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். விரைவில் வெளியாகும் இந்தப் படம் இளம் தலைமுறைக்கு நிச்சயம் ஒரு பாடமாக இருக்கும்” என்றார் இயக்குநர் சேது இய்யள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x