திரை விமர்சனம் - ஓங்கா (ஒடியா) | புயலாய் மாறிய சிறுவன்

திரை விமர்சனம் - ஓங்கா (ஒடியா) | புயலாய் மாறிய சிறுவன்
Updated on
2 min read

நடிகை நந்திதா தாஸ் தமிழ்த் திரைப்பட உலகத்தைப் பொறுத்த அளவில் ஊறுகாய். அவ்வப்போது தமிழ்த் திரைப்பட உலகம் அவரை பயன்படுத்திக்கொள்ளும். ‘நீர்ப்பறவை’, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘அழகி’ என்று சில தமிழ்ப் படங்களில் தோன்றியுள்ளார்.

இந்திய மொழிகளில் பலவற்றில் அவர் நடித்துள்ளார். பூ புயலாகி நாசமாக்கப்படுவதைப் பற்றிய ஒரு ஒடியா படத்தில் சமீபத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் பெயர் ‘ஓங்கா’. இதில் வரும் ஒரு சிறுவன் வில்லெடுத்து ராமன் அவதாரமாய் நினைத்துப் புயலாகிறான்.

இப்படத்தில் நந்திதா தாஸ், ஆதிவாசிப் பகுதியில் பணிபுரியும் ஒரு ஆசிரியை. ஆதிவாசிக் குழந்தைகளுக்கு வாழ்க்கை கல்வியைச் சொல்லித் தருபவர் என்று சொல்லலாம். ஒரு பக்கம் மாவோயிச இயக்கத்தினர் அவரை தங்கள் இயக்கத்தில் இழுக்க முயற்சிக்கின்றனர். ராணுவத்தினருக்கோ அவர் உளவாளியா, தீவிரவாத இயக்கத்துக்கு துணையாக இருப்பவரா என்ற சந்தேகம்.

அந்த ஒடியா மலைப்பகுதியில் பாக்சைட் கனிமத்தை பெரிய நிறுவனங்கள் வெட்டி எடுத்துக் கடத்துகிறது. அதனால் தீவிரவாதத்தை காரணமாகச் சொல்லி ஆதிவாசிகள் மிரட்டப்படும் சூழல்.அவர்களை வெளியேற்ற அவ்வப்போது எழும்பும் குரல்கள்.

ஓங்கா என்ற சிறுவன் பக்கத்து நகரத்துக்கு ராமாயணம் நாடகம் பார்க்கச் செல்கிறான். குழந்தைகளை ஆசிரியை கூட்டிச் சென்ற போது அவன் போகவில்லை. சக மாணவனிடம் வழி கேட்டுப் போகிறான். கொட்டகையில் ஏமாற்றி நுழைந்து நாடகம் பார்த்து வெளியேறுகிறான். நாடகத்தில் நீல நிற ராமன் சீதையைக் காப்பாற்றுகிறார். ராவணனை வதம் செய்கிறார். ஓங்கா தானும் ராமனாகி விட்டதாக எண்ணி உடம்பில் நீல நிறத்தை பூசிக்கொண்டு கிராமத்துக்கு திரும்புகிறான்.

ராமனே எல்லாம். பூமி தாய் போன்றது. அதை காப்பாற்ற வேண்டும் என எண்ணுகிறான்.ஆனால் அந்த ஆதிவாசி பூமி கனிம வளங்களைக் கொள்ளையடிக்கும் பல்வேறு நிறுவனங்களால் சூழப்பட்டிருப்பதை அந்த சிறுவன் அறிய மாட்டான்.அதற்குள் கிராமமே களேபரப்பட்டுப் போயிருக்கிறது.

ஓங்காவை காணவில்லை என்று அவன் பெற்றோர் தேடுகின்றனர்.ஆசிரியை ராணுவத்தால் கடத்தப்பட்டு... தீவிரவாதிகளுக்கு உளவாளியா? மணவர்களுக்குத் தீவிரவாதத்தைக் கற்றுக் கொடுக் கிறாயா என்று கேட்டு சித்ரவதை செய்யப்படுகிறாள். தப்பி வருபவள் சாவு நிலைக்குத் தள்ளப்படுகிறாள். ஆசிரியை கடத்தப்பட்டது போன்று ஒவ்வொரு ஆதிவாசிக்கும் நேரலாம் என்று மாவோயிஸ்டுகள் எழுச்சி பெறச் செய்கிறார்கள்.

மாவோ கெரில்லாக்கள் அக்கிராமத்துக்கு வரும் ராணுவத்துடன் சண்டை போட, பலர் செத்து விழுகிறார்கள். ராமனாகத் திரும்பி வரும் ஓங்கா இந்தப் போரைக் காண்கிறான். அவனின் வில்லும் அம்பும் தன் ஆதிவாசி உறவுகளைக் காக்கும் என்று எண்ணுகிறான். ஆதிவாசி மக்களின் ஒடியாவும், ராணுவத்தினரின் இந்தியுமாக அப்பகுதி மொழிகளால் பிரிக்கப்பட்டிருப்பதை இப்படம் காட்டுகிறது. அந்த இரு மொழிகளிலும் இப்படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

படத்தைத் தயாரித்திருப்பவர் மறைந்த ஓவியர் எம் எஃப். உசேனின் பேத்தி. மாவோயிசத் தலைவராக நடித்திருப்பவர் சீமா பிஸ்வாஸ்.

நந்திதா தாஸின் அப்பா ஜதீன் தாஸ் ஒரு பிரபல ஓவியர். ‘டார்க் ஈஸ் பியூட்டிஃபுல்’ என்ற சிகப்புத்தோல் கலாச்சாரத்துக்கு எதிரான ஒரு அமைப்பில் நந்திதா சமீபகாலமாய் ஆர்வம் கொண்டுள்ளார். பிறக்கும் குழந்தை இறப்பு விகிதம் அதிகரிப்பு, பாலின ரீதியான வேறுபாடு, இனவாதப் பிரச்சினை, பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த செயல்பாடுகளுக்காக யேல் பெல்லோ விருது அவருக்கு சமீபத்தில் அளிக்கப்பட்டது.

‘மோடி ஒரு ஹிட்லரே’ என்ற அவரின் விமர் சனத்துக்காக கடுமையாய் விமர்சிக்கப் பபட்டவர் நந்திதா தாஸ். பூ ஒன்று புயலாவதை ஆதிவாசிகளுக்கான கல்வி தரும் ஆசிரியை பாத்திரத்தில் நடித்து ‘நச்’சென்று வெளிப் படுத்தியிருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in