Last Updated : 06 Mar, 2015 01:23 PM

 

Published : 06 Mar 2015 01:23 PM
Last Updated : 06 Mar 2015 01:23 PM

சினிமாவைக் கற்றுக்கொள்ள ஒரு பள்ளி

சினிமா என்னும் ஊடகத்தின் மீது தாகம் கொண்ட மாணவர்களுக்குத் திரைப்படத்தின் சகல விதமான நுட்பங்களையும் கற்றுத்தருவதற்கான முயற்சியைத் திரைப்படத் தயாரிப்பாளரும் விமர்சகருமான கோ.தனஞ்செயன் தொடங்கியுள்ளார்.

இதற்காக பாஃப்டா (BOFTA - Blue Ocean Film & Television Academy) என்னும் சர்வதேச தரம் வாய்ந்த திரைப்பட அகாடமியை அவர் தொடங்கியுள்ளார். நவீன வசதிகள் கொண்ட வகுப்பறைகள், ப்ரிவியூ மற்றும் டப்பிங் திரையரங்கம், எடிட்டிங் அறைகள், படப்பிடிப்பு அரங்குகள் மற்றும் டி.வி.டி நூலகத்துடன் கூடிய கல்லூரி இது.

தமிழ் சினிமாவின் பலதுறை சாதனையாளர்களும், ஆளுமைகளும் சேர்ந்து சினிமா மாணவர்களுக்குப் பாடம் எடுக்கவிருக்கிறார்கள். “துறை சார்ந்த நிபுணர்கள் வருகைதரு பேராசிரியர்களாக அல்லாமல் முழுநேர ஆசிரியர்களாக இருப்பது இதன் சிறப்பம்சம்” என்கிறார் தனஞ்செயன்.

இயக்குநர் மகேந்திரன், திரைப்பட இயக்கம் என்னும் பாடப்பிரிவின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். திரைக்கதை எழுதுவதில் கில்லாடி என்று பெயர் எடுத்த கே.பாக்யராஜ் திரைக்கதைப் பிரிவுக்குப் பொறுப்பேற்றுள்ளார். ஒளிப்பதிவுத் துறைக்கு இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான மது அம்பாட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவரான நாசர் நடிப்பைக் கற்றுக்கொடுக்க உள்ளார்.

“திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி ஊடகத்தில் தேர்ச்சி பெற்ற நிபுணர்களிடம் நேரடியாகப் பயிற்சி பெறவேண்டும் என்பது சினிமா மாணவன் ஒவ்வொருவரின் கனவாக இருக்கும். அது பாஃப்டாவில் நிறைவேறப்போகிறது. திரைத்துறை பிரபலங்களும், ஆளுமைகளும் தினசரி மாணவர்களுக்குப் பாடம் எடுக்க உள்ளனர்.” என்கிறார் தனஞ்ஜெயன்.

“திரைப்படம் எடுப்பதில் உள்ள சகல நுணுக்கங்களையும் கற்றுக்கொள்வதற்கும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரிப்பில் அனுபவம் பெறுவதற்கும் பாஃப்டா தரமான கல்லூரியாகத் திகழும் என்ற நம்பிக்கை இருக்கிறது. காரணம் இருபது ஆண்டுகளுக்கும் குறையாத அனுபவத்துடன் தத்தமது துறையில் முத்திரை பதித்தவர்கள் இங்கே ஆசிரியர்களாக வர உள்ளனர்.” எனும் அவர், “திரைப்பட இதழியலும் எங்கள் பாடப் பிரிவில் முக்கியமானது” என்றும் குறிப்பிடுகிறார்.

திரைப்படக் கல்வியைக் கற்றுத்தரும் அதேநேரம் இங்கே பயிலவிருக்கும் மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே தங்கள் படைப்புத் திறனை வெளிப்படுத்துவதற்கும், சரியான வாய்ப்புகளைப் பெறுவதற்கும் பாஃப்டா உதவ இருக்கிறதாம். சுதந்திரமான, சந்தோஷமான சூழ்நிலையில் மாணவர்கள் கற்க வேண்டுமென்பதே எங்கள் நோக்கம் என்று கூறுகிறார் தனஞ்ஜெயன். சென்னையில் திரையுலகின் மையமாக இருக்கும் கோடம்பாக்கத்தில் உள்ள ரவிபிரசாத் பிலிம் லேப் கட்டிடத்தில் வரும்,ஜூலை ஒன்றாம் தேதி முதல் பாஃப்டா அகாடமி செயல்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x