Published : 05 Apr 2017 10:40 AM
Last Updated : 05 Apr 2017 10:40 AM

சினிமா எடுத்துப் பார் 101: வாழ்ந்து காட்டுங்கள்!

நானும் என் மனைவி கமலாவும் பெற்ற பிள்ளைகள் பெற்றோரின் புகழை ‘உயர்த்தும்’ பிள்ளைகள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் முன்னிலையில் இருக்கிறார்கள். என் மூத்த மகள் மீனாள். என் மீது அன்பு செலுத்தி வளர்த்த என் ஆயாவின் பெயர் மீனாட்சியை அவருக்கு வைத்தோம். மீனா, என் மனைவி போலவே பொறுமை யானவர். கடுமையான உழைப்பாளி. திட்டமிட்டு குடும்பத்தை நடத்துபவர். அவரது கணவர் நாச்சியப்பன், இந்தியன் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நல்ல கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர். சமூக ஊடகங்களில் தொடர்ந்து பங்குபெற்று வருகிறார்.

இவர்களுக்கு மாதவி, கனகா என்ற 2 மகள்கள். இவர்களில் மாதவி, வள்ளி யப்பனை திருமணம் செய்துகொண்டு சிங்கப்பூரில் வாழ்கிறார். இருவரும் வேலைக்கு போகிறார்கள். இவர்கள் கருத்தொருமித்த தம்பதிகள். இவர் களுக்கு ரதி, கவின் ஆகிய இரண்டு குழந் தைகள். இருவரையும் தமிழ்ப் பள்ளியில் படிக்க வைக்கிறார்கள். ரதி நாட்டியத் தில் புகழ்பெற்று விளங்குகிறார். கவின் நடிப்பில் புகழ்பெற்று விளங்குகிறார். தாத்தாவின் ரத்தம் கொள்ளுப் பேரனுக்கும் பேத்திக்கும் வந்திருக்கிறது.

நாச்சியப்பன் - மீனாள் தம்பதியின் இன்னொரு மகள் கனகா. எப்போதும் துறுதுறு என்று இருக்கிற பெண். பேச்சும் அப்படியே. அவரை தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் படிக்க வைத்தோம். படிப்போடு சேர்ந்து காதலும் வந்துவிட்டது. அங்கே தங்க வேலுவை காதலித்து பெற்றோர் அனுமதி யோடு ‘ஜாதி மறுப்பு திருமணம்’ செய்து கொண்டார். இரு ஜாதிகளும் கரைந்துவிட்டன. தங்கவேலு சவுத் இந்தியன் வங்கியில் நிர்வாகியாக பணியாற்றுகிறார். கனகா, வெங்கடேஸ்வரா இன்ஜினீ யரிங் கல்லூரியில் உதவி பேராசிரியர். இவர்களுக்கு கவிமொழி, கயல்மொழி என்று இரு மகள்கள். ஒன்று ‘அடம்’. ஒன்று ‘ஆழம்’.

என் மகன் சுப்பையாவுக்கு என் தந்தை யின் பெயரை வைத்தோம். எம்.காம் படித்துவிட்டு, ‘வேலைக்கு போக மாட் டேன். சொந்த தொழில்தான் செய்வேன்!’ என்று கூறினார். திருச்சியில் வி.கண்ணப் பன் (வி.கே.என்) அவர்களிடம் தொழில் பயிற்சி பெற்றுக்கொண்டு சென்னை யில் ஆணி, கம்பி தயாரிக்கும் தொழிற் சாலையை நிறுவி நல்ல முறையில் நடத்தி வருகிறார்.

இளைஞனாக இருந்தபோது என் காரை எடுத்துக்கொண்டுபோய் ஓட்டப் பழகும்போது விபத்துக்குள்ளாகி கார் பழுதுபட்டது. அவரைக் கூப்பிட்டு, ‘என் அனுமதியில்லாமல் காரை எடுத்து ஓட்டக்கூடாது’ என்று கண்டித்தேன். அவர் என் மனைவி கமலாவிடம் போய், ‘இனிமேல் அப்பா காரை எடுக்க மாட்டேன். நானே சம்பாதித்து கார் வாங்கி ஓட்டுவேன்!’ என்று சபதம் செய்தார். அதன்படியே சம்பாதித்து கார் வாங்கி இப்போது ஓட்டிக்கொண்டிருக்கிறார். வாழ்க்கையில் என் மகனின் ‘வைராக் கியம்’ எல்லோருக்கும் வேண்டும்.

சுப்பையாவின் மனைவி வசந்தி, எல்.ஐ.சி. முகவராக பணியாற்றுகிறார். பொறுப்பான குடும்பத் தலைவி. அவர் உண்டு, அவர் வேலை உண்டு என்று இருப்பவர். அவர் கடுமையானவர் அல்ல. கடமை ஆற்றுபவர். அவர்களுக்கு ஒரு பெண். அவருக்கு கமலா என்று என் மனைவியின் பெயரை வைத்தோம். அவர் படித்து பட்டம் பெற்று பணியாற்றி வருகிறார். விரைவில் அவரின் திருமண செய்தியை சொல்வோம். என்னோடு என் மகன் குடும்பம் இருக்கிறது என்று சொல்வதைவிட என் மகன் குடும்பத்தோடு நான் இருக்கிறேன் என்று சொல்வதே உண்மை.

எங்கள் சின்ன மகள் விசாலாட்சி, ஆரம்பத்திலிருந்தே ‘நான் டாக்டருக் குத்தான் படிப்பேன்’ என்று பிடிவாதமாக இருந்து டாக்டரானார். அவருடைய கணவர் டாக்டர் என்.எஸ்.முத்தையா, என் குழுவில் தயாரிப்பு நிர்வாகியான கே.எஸ்.நாகப்பன் அவர்களின் தம்பி.

டாக்டர் முத்தையாவும், டாக்டர் விசா லாட்சியும் சேர்ந்து நடேசன் நகரில் ஒரு கிளினிக் வைத்திருக்கிறார்கள். அந்த கிளினிக்கில் கூடும் கூட்டமே அவர்கள் நல்ல டாக்டர்கள் என்பதைக் கூறும். நோயாளிகளோடு டாக்டராக பழகாமல் குடும்பத்தில் ஒருவராக பழகுவார்கள். அறக்கட்டளைகளை ஏற்படுத்தி பல வித மான உதவிகளை செய்து வருகிறார்கள். நான் உடல்நலத்தோடு இருப்பதற்கு இவர்களின் மருத்துவத்தை நான் முழுமையாகப் பின்பற்றுகிறேன்.

இவர்களுக்கு அழகுசுந்தரம் என்ற மகன். படித்து பட்டம் பெற்று பெரிய ஐ.டி கம்பெனியில் பதவி வகிக்கிறார். சென்னைக்கும், அமெரிக்காவுக்கும் பறந்துகொண்டிருக்கிறார். அவர் மனைவி பிரியா. அவரும் கம்ப்யூட்டர் பொறியாளர். வேலைக்கு போய்க் கொண்டிருந்தார். மகன் ருத்ரா பிறந்த தும் வேலையை விட்டுவிட்டு ருத்ராவை கவனிப்பதையே வேலையாக ஆக்கிக் கொண்டார்.

கொள்ளுப் பேரன் ருத்ரா எனக்கு வைத்திருக்கும் பெயர் ‘சாக்கையா’. நான் எப்போது அவனை பார்க்கச் சென் றாலும் சாக்லேட் வாங்கிக்கொண்டு போவேன். அதற்காக எனக்கு ‘சாக்கையா’ என்று பெயர் வைத்துவிட்டான். அவ னிடம், ‘உன் மடியில் படுத்து தூங் கட்டுமா?’ என்று அவன் மடியில் தலைசாய்த்து படுத்துக்கொள்வேன். அவன் எனக்கு தாலாட்டு பாடி என்னை தூங்க வைப்பான். எத்தனை கோடிகள் கொடுத்தாலும் இந்த சுகத்துக்கு ஈடு இணையே இல்லை.

டாக்டர் முத்தையா விசாலாட்சி மகள் முத்துலட்சுமி. பெற்றோர் வழியில் எம்.பி.பி.எஸ் படித்து டாக்டராகியுள் ளார். இப்போது எம்.டி படித்துக் கொண் டிருக்கிறார். வருங்காலத்தில் மருத்துவ துறையில் தன் பெற்றோரை மிஞ்சுவார். இவருடைய கணவர் முத்துக்குமார். ஐ.டி துறையில் பணியாற்றி வருகிறார். நல்லவர், வல்லவர்.

என் மனைவி கமலா இல்லாத குறையைப் போக்கும்வகையில் என் பிள்ளைகள் துணையாக இருந்து என்னை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறார்கள். நான் ஒரு குடும்பத் தலைவனாக வாழ்கிறேன்.

என் தம்பி சுப.வீரபாண்டியன் ஒரு முறை சொன்னார். ‘எங்கள் அண்ணன் கோடு போட்டால் நாங்கள் தாண்ட மாட்டோம். நாங்கள் தாண்டுவோம் என்று தெரிந்தால் எங்கள் அண்ணன் கோடு போட மாட்டார்’. அந்த மன ஒற்றுமைதான் எங்களை ஒற்றுமையாக வாழ வைக்கிறது.

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒவ்வொருவர் வீட்டில் ‘குடும்ப ஒன்று கூடல்’ என்ற பெயரில் கூடி மகிழ்கிறோம். அதேபோல் ஆண்டுக்கொரு முறை சுற்றுலா செல்கிறோம். இதனால் குடும்ப உறவுகளும், பாசமும் வளர்கின்றன. ‘குடும்பம் ஒன்று கூடலை’ எல்லா குடும்பத்திலும் நடத்தி ‘கூட்டுக் குடும்ப வாழ்க்கையை’ ருசிக்கலாம்.

‘குடும்ப ஒன்றுகூடல்’ நிகழ்வில்... | நாச்சியப்பன் - மீனாள் குடும்பத்தினர்

சுமந்து வரும் நன்றியினை சொல்லிவிட முடியுமா?

நான் வாழ்க்கையில் முன்னேறு வதற்குப் காரணமாக இருந்தவர்கள் என்று ஒரு பட்டியல் போட்டால் அதில் பல ஆயிரம் பேரை சொல்ல வேண்டியிருக்கும். அவர்கள் அத்தனை பேருக்கும் நன்றி... நன்றி!

குறிப்பாக, என் பெற்றோர் ராம.சுப்பையா, விசாலாட்சி, குடும்பத்தினர், தே.பிரித்தோ மேல்நிலைப் பள்ளி, மச் சாடோ சுவாமி மற்றும் ஆசிரியர்கள், ‘தென்றல்’ இதழ், கவியரசர் கண்ணதாசன் அவர்கள், ஏவி.எம்.பல்கலைக்கழகத் தின் வேந்தர் ஏவி.மெய்யப்பன் அவர் கள், துணைவேந்தர்கள் முருகன், குமரன், சரவணன், பாலசுப்ரமணியன், மாப் பிள்ளை வீரப்பன், மீனா, திரைப்பட இயக் குநர்கள், நிர்வாகிகள், பணியாளர்கள், ஊழியர்கள். என்னை உதவி இயக்கு நராக ‘செட்’டுக்கு அழைத்துச்சென்ற ஏவி.எம்.குமரன் அவர்கள், எனக்கு குருவை அடையாளம் காட்டிய ஏவி.எம்.சரவணன் அவர்கள், என் குரு ஏ.சி.திருலோகசந்தர் அவர்கள், ‘கனிமுத்து பாப்பா’ படத்தின் மூலம் என்னை இயக்குநராக்கிய வி.சி.குகநாதன் அவர்கள்.

என் பக்கபலமான என் குழுவினர், தயாரிப்பாளர்கள், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களோடு மற்ற நடிகர், நடிகைகள், தொழில் நுணுக்க கலை ஞர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், பத்திரிகையாளர்கள், ஊடகங்களை சார்ந்தவர்கள், குறிப்பாக ரசிகர்கள் அத்தனை பேருக்கும் என் உளம் நிறைந்த நன்றியை, வணக் கத்தை, வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘தி இந்து’ தமிழ் நாளிதழில் 101 வாரங்களாக ‘சினிமா எடுத்துப் பார்’ என்ற தலைப்பில் எழுதி வருகிறேன். இதற்கு துணையாக இருந்த ‘தி இந்து’ நாளிதழ் ஆசிரியர் குழுவினருக்கும், புகைப்படங்களை கொடுத்து உதவிய ஞானம் அவர்களுக்கும், பல வகை யிலும் துணையாக இருந்த ஏவி.எம். கண்ணன், எஸ்.பி.அர்ஜூனன், எடிட்டர் சேகர், பப்ளிசிட்டி சண்முகம், ரம்யா ஆகியோருக்கும், படித்து பாராட்டிய வாசகர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

வருகிற ஏப்ரல் 7-ம் தேதி எனக்கு 82 வயது பிறக்கிறது. என் மனைவி கமலா இறந்தபிறகு என் பிறந்த நாளை கொண்டாடுவதில்லை. அன்றைக்கு ஆழியார் அறிவுத் திருக்கோயில் சென்று விடுவேன். உடலையும், மனதையும் புதுப்பித்துக்கொண்டு வருவேன். எல்லா விதமான விழாக்களிலும், நிகழ்ச்சிகளி லும் கலந்துகொண்டு உயிர்ப்புடன் இருக்கிறேன்.

ஒவ்வொருவரும் லட்சியத்தோடு வாழுங்கள். சரித்திரத்தில் இடம்பெறுங் கள். லட்சியத்தில் உறுதியாக இருந்து உழைத்தால் வெற்றி நிச்சயம். இது சத்தியம்!

‘சினிமா எடுத்துப் பார்’ என்ற இத் தொடரை நிறைவு செய்கிறேன். ‘வாழ்க் கையை வாழ்ந்து பார்’ என்று வாழ்ந்து காட்டுங்கள்.

வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்!

- நிறைந்தது. | எழுத்தாக்கம்: ம.மோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x