Last Updated : 21 Mar, 2014 12:00 AM

 

Published : 21 Mar 2014 12:00 AM
Last Updated : 21 Mar 2014 12:00 AM

சர்வதேச சினிமா: அதிகாரத்துக்கு எதிரான ஓவியம்

சுவரில் மாட்டப்பட்டுள்ள தனது ஓவியத்துக் குள் வான்கா நுழைந்து செல்வதை ஏற்கெனவே நாம் அகிரா குருசோவாவின் ட்ரீம்ஸ் படத்தில் பார்த்திருக்கிறோம்.

அதைப் போல, பீட்டர் புருகல் வரைந்த ஓவியத்திற்குள் நம்மை அழைத்துச் செல்கிறது, 'The Way to Calvary' (2011) என்ற போலந்து திரைப்படம்.

ட்ரீம்ஸ் படத்தின் ஆறு பிரிவுகளில் ஒன்று மட்டுமே வான்கா ஓவியம் பற்றியது. ஆனால் புருகல் ஓவியம் பற்றிய இப்படமோ ஒரு முழுநீளத் திரைப்படம்.

உலகின் முக்கிய அருங்காட்சி யகங்கள் சிலவற்றுள் புருகல் ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. வியன்னா அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள பீட்டர் புருகலின் 'The Way to Calvary' என்ற ஓவியமே இத்திரைப் படத்திற்கு அடிப்படை. இது 1564இல் வரையப்பட்டது.

ஓவியத்தில் இடம் பெற்ற நூறுக்கும் மேற்பட்டவர்கள் திரைப்படத்தில் உயிரோட்டம் பெறுகிறார்கள். மலையுச்சி யில் அமைக்கப்பட்டுள்ள ஆலையின் காற்றாடி சுழல்கிறது. அதற்குப் பின்னுள்ள காற்றாலை இயங்கத் தொடங்குகிறது. மரக்கட்டைகளில் ஆன பிரமாண்டப் பல் சக்கரங்கள் ‘கர்ரக்புர்ரக்’ என உரசுகின்றன. சக்கரங்கள் சுழல இயந்திரம் முடுக்கப்படுகிறது.

மேலும் மக்கள் காலையில் எழுந்து வேலைக்குக் கிளம்புவது, தூங்கி எழுந்த குழந்தைகள் வீடுகளை நிறைத்து விளையாடுவது மக்கள் நிலத்தை உழுவது, மாவு அரைப்பது, ரொட்டி சுடுவது, அதைப் பலரும் வாங்கிச் சென்று விற்பது என்பது மட்டுமல்லாமல் மாலையில் மக்கள் ஒன்று கூடி மலைச் சரிவுகளில் ஆடிப்பாடி மகிழவும் செய்கிறார்கள்.

காற்றாலையின் சொந்தக்காரர் இதையெல்லாம் மலையின் உச்சி யிலுள்ள காற்றாடித் தளத்திலிருந்து பார்க்கிறார் 16ஆம் நூற்றாண்டின் குறிப்பிட்ட நிலப்பரப்பு சார்ந்த நாட்டுப்புற மக்களின் அன்றாட வாழ்க்கை நம் கண்முன் விரிகிறது. இதைத் தூரத்தில் இருந்து கவனித்தவாறு பீட்டர் புருகல் ஓவியமாக வரைந்து கொண்டிருக் கிறார்.

இப்படிப்பட்ட சித்தரிப்புகள் தவிர, கதையோட்டத்திலும் இயக்குநரின் பரந்த சிந்தனையும் கெட்டிக்காரத்தனமும் மிளிர்கின்றன.

ஒரு முக்கியக் காட்சி....

ஸ்பானிய அரசின் சினத்திற்கு ஆளாகிறான் ஒரு குடியானவன். அவனை அவனது அன்பான மனைவி துடிதுடிக்க அடித்து இழுத்துச் செல்கிறது ஆக்கிரமிப்பு அரசின் கூலிப்படை. ஊர் பொது இடத்தில் குதிரை வீரர்கள் சாட்டையால் மாறி மாறி விழுந்து கிடப்பவன் உடல் எங்கும் சொடுக்கு கிறார்கள். ரத்த விளாறான உடலைச் சக்கரத்தில் கட்டி கழுவேற்றுகிறார்கள். அவன் உடலைப் பறவைகள் கொத்தித் தின்கின்றன.

இந்த இடத்தில் ஓவியம் வரைவதை நிறுத்திவிட்டு அதிகாரத்துக்கு எதிராகச் செய்வதறியாது திகைத்து நிற்கிறார் புருகல். அவரின் குறிப்பேடுகளிலிருந்து ஓவியங்கள் காற்றில் பறந்து செல்கின்றன.

இதன் பின்னர்தான் ‘The Way to Caldary' என்ற ஓவியத்தின் முக்கியப் பகுதியான ஏசுவின் சிலுவையேற்றம் இடம் பெறுகிறது. கல்வாரி மலையை நோக்கிச் சிலுவை சுமந்து வரும் ஏசு கிறிஸ்து ஊர்வலமாய் அழைத்துச் செல்லப்படுகிறார். சிலுவை நழுவும்போது சீமோன் உதவுகிறான். இரு கள்வர்களுக்கு இடையில் கிறிஸ்துவின் சிலுவையேற்றம் நடைபெற, மக்தலேனாவும், மேரி மாதாவும் துடிதுடிக்க, மக்கள் செய்வதறியாது நிற்கிறார்கள்.

இங்குதான் இயக்குநர் லெ மெஜவ்ஸ்கியின் நுட்பத் திறனை நாம் வியக்கிறோம். யூத அரசுக்கு எந்த விதத்திலும் சளைத்தவை அல்ல, பின்னர் வந்த கத்தோலிக்க அரசுகள், அல்லது (மதக்) கொள்கையைப் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொண்டு வந்த அரசுகள் என்று பொட்டில் அறைந்து கூறிவிடுகிறார் இயக்குநர்.

குடியானவனின் மரணத்தைக் கண்டு அரற்றிக் கடைசியில் மண்ணுக்குள் உயிரோடு புதைபடும் அவனது மனைவியாக நடித்திருப்பவர், காலத்தின் சாட்சியாக வரும் பீட்டர் புருகலாகத் தோன்றிய ரட்ஜர் ஹாயர் உள்படப் படத்திற்காக உழைத்தவர்கள் நம்மை மலைக்க வைக்கின்றனர்.

மலைக்க வைப்பதற்கு மட்டும் அல்லாமல் ஒரு ஓவியத்தை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதற்காகவும் இத்திரை ஓவியம் வண்ணமயமாகத் தீட்டப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x