Last Updated : 28 Jun, 2019 09:46 AM

 

Published : 28 Jun 2019 09:46 AM
Last Updated : 28 Jun 2019 09:46 AM

திரைப் பார்வை: சிறிய விஷயங்களின் சினிமா (தமாஷ - மலையாளம்)

சினிமா பெரிய விஷயங்களின் பிரதிநிதித்துவமாக இருக்கிறது. அது சிறிய விஷயங்கள் மீது அவ்வளவாகத் தன் கவனத்தைத் திருப்புவதில்லை. ஆனால், இதற்கு மாறுபட்டுச் சிறிய விஷயங்களைச் சொல்லும் சினிமாக்கள் அவ்வப்போது வருவதுண்டு. அவற்றுள் ஒன்றுதான் ‘தமாஷ’.

ஒரு அழகான ஆண், ஒரு அழகான பெண் எப்படி இருக்க வேண்டும் என லட்சணங்களை சினிமா மறைமுகமாக மக்கள் மனத்தில் உருவாக்கி விடுகிறது. மேலும், அழகற்றவர்கள் எனக் கருதப்படுவர்களையும் சினிமா காலம்காலமாகக் கேலிக்கு உள்ளாக்கிவருகிறது.

கறுப்பு நிறத்தவர்கள், சராசரிக்கும் குறைவான உயரம் கொண்டவர்கள், குண்டான உடல்வாகு கொண்ட பெண்கள் போன்றவர்கள் நகைச்சுவைக்காகப் படத்தில் பயன்படுத்தப் படுவதுண்டு.

இப்படியான ஒருவர்தான் படத்தின் நாயகன். அவர் ஒரு மலையாளப் பேராசிரியர். மலையாள ஆசிரியர்களே கேலிக்கு உரியவர்கள். அதிலும் இவருக்கு வழுக்கைத் தலை, வயதுக்கு மீறிய முதுமைத் தோற்றம்.

இந்தக் கதாபாத்திரத்தில் விமல் ஃபோர்ட் நடித்திருக்கிறார். ‘பிரேம’த்தில் விமல் சாராக வந்து கவனம் ஈர்த்த இவர், கிட்டத்தட்ட அதே போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரது உருவ அமைப்பால் திருமணம் கைகூடாமல் போகிறது. பெண்கள் பார்த்த மாத்திரத்தில் நிராகரித்துவிடுகிறார்கள்.

மனமுடைந்து சந்நியாசம் போகக்கூட முயன்று பார்க்கிறார். தனது ஒழுக்கங்களை ஒதுக்கிவிட்டுக் காதலித்து மண முடிக்கலாம் என முடிவெடுக்கிறார். இந்நிலையில் பெண்கள் மூவர் அவரது வாழ்க்கைக்குள் குறுக்கிடுகிறார்கள். இந்தக் குறுக்கீடுகள்தாம் சினிமா.

பெண்கள் மூவரில் கடைசியாக வந்து சேரும் சின்னு கதாபாத்திரத்தின் வழி  இந்தப் படத்தை எழுதி இயக்கியிருக்கும் அறிமுக இயக்குநர் அஷரஃப் ஹம்சாவின் குரல் வெளிப்படுகிறது. அதுதான் படத்தை முன்னோக்கிக் கொண்டுசெல்கிறது.

மலையாளப் பேராசிரியராக இருந்த தலித் எழுத்தாளர் சி.ஐயப்பனுடன் வினய் ஃபோர்ட் கதாபத்திரத்தை இயக்குநர் ஒப்பிட முயன்றுள்ளார். ஆசிரியராகத் தான் எதிர்கொண்ட அவமானங்களை ஐயப்பன் எழுதியிருக்கிறார். தன் உருவ அமைப்பால் சமூக வெளியில் கேலிக்கு உள்ளாக்கப்படும் சூழலையும் ஐயப்பன் பகிர்ந்திருக்கிறார்.

நாயகன் வகுப்பெடுக்கும் காட்சிகளில் ஐயப்பனின் வரிகள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. இந்த 21-ம் நூற்றாண்டில் சமூகம் என்னும் வெளியைச் சமூக வலைத்தளங்கள் எடுத்துக் கொண்டுள்ளன. தாக்குதல் ஏற்கெனவே பலவீனமாக இருக்கும் அவர்களை அவற்றின் இன்னும் ஒடுங்கச்  செய்வதைப் படம் விவரிக்கிறது. ஆனால், அதைச் சொல்லும்போது படமும் உணர்ச்சி வசப்பட்டுவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x