Last Updated : 30 May, 2019 06:51 PM

 

Published : 30 May 2019 06:51 PM
Last Updated : 30 May 2019 06:51 PM

திரைப் பார்வை: ஆண்மையின் போராட்டம் (இஷ்க் - மலையாளம்)

ஆங்கில மொழிக்கு இந்தியா தந்த அரும் பங்களிப்பு Moral Police என்ற ஒரு சொற்பிரயோகம். இந்தச் சொல் கடந்த ஐந்தாண்டுக் காலகட்டத்தில் இந்தியாவின் பிராந்திய மொழிகளிலும் மொழி மாற்றம் கண்டுள்ளது.

தமிழில் கலாச்சாரக் காவலர்கள் என்றும் மலையாளத்தில் சதாஜார போலீஸ் என்றும் இந்தச் சொல் வளர்ச்சி அடைந்தது. இந்தக் கலாச்சாரக் காவலர்களால் நாட்டில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் அதிகம்.

கேரளத்தில் இதன் பாதிப்பு தீவிரமானது. சிலர் கொல்லப்பட்டுள்ளனர். அவமானம் தாங்காமல் பலர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

சனல்குமார் சசிதரனின் ‘செக்சி துர்கா’ கிரிஷ் தாமோதரனின் ‘அங்கிள்’ அமல்நீரதின் ‘வரத்தன்’ போன்ற படங்கள் தற்காலத்தின் இந்தப் பாதிப்பை சினிமாவில் கவனப்படுத்தியுள்ளன. இந்த வரிசையில் ஒரு புதிய வரவு, அறிமுக இயக்குநர் அனுராஜ் மனோகரின் ‘இஷ்க்’.

‘கிஸ்மத்’ ‘பரவ’ ‘ஈட’ ‘கும்பளங்கி நைட்ஸ்’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து ஷேன் நிகம், மையக் கதாபாத்திரமாக நடித்திருக்கும் இந்தப் படத்தை இரு பாகங்களாகப் பிரித்துப் பார்க்கலாம். முதல் பாகம் ஒரு அழகான காதல் கதை.

முட்டாள்தனமும் துள்ளலும் கொண்ட ஒரு காதல். இதன் கதையாசிரியர் ரதீஷ் ரவி இதன் மறுபாகத்தை வேறு படம்போல் தனித்துவத்துடன் எழுதியுள்ளார். இந்த இடத்தில் படம், சனல்குமாரின் ‘செக்சி துர்கா’வுக்கும் ஜோய் மாத்யூவின் ‘அங்கி’ளுக்கும் அருகில் வருகிறது. ஆனால், அந்த இரு படங்களும் முடியும் இடம்தான் இந்தப் படத்தின் இடைவேளை. அங்குதான் படம் தன் பிடியையும் முறுக்கிறது.

கொச்சியின் நடுத்தரவாசிகளின் குடியிருப்புப் பகுதி ஒன்றில் படம் தொடங்குகிறது. அதே நேரம்  புறக் காட்சி வர்ணனைகளில் படம் கவனத்தைச் சிதறடிக்கவில்லை. தொடக்கத்திலிருந்தே கதாபாத்திரங்களுக்கு அண்மையில் பயணிக்கத் தொடங்குகிறது. தந்தையில்லாத வீட்டின் ஆண் பிள்ளை ஷேன் நிகம்.

அக்காவுக்குக் கல்யாணம். போன், வாட்ஸ்-அப் வழி ஷேனும் ஒரு காதலை வளர்த்துவருகிறார். கோட்டயத்தில் படிக்கும் காதலி ஆன் ஷீத்தலின் பிறந்தநாள். அதைக் கொண்டாட நண்பனின் காரில் இருவரும் பயணிக்கிறார்கள்.

இந்தப் பயணத்தில் கலாச்சாரக் காவலர்கள் குறுக்கிடுகிறார்கள். ஆனால், இது படத்தின் மையமல்ல. அதிலிருந்து மீள்கிறார்கள். அதற்குப்  பிறகு ஆண் மனம் படும் அவஸ்தையைத்தான் படம் சொல்ல முயன்றுள்ளது.  இந்த ஆண் மனத்தின் பரிதவிப்பை ஷேன் நிகம் சரியாக வெளிப்படுத்தியுள்ளார்.

கலாச்சாரக் காவலராக நடித்துள்ள ஷைன்  டொம் சாக்கோ ‘கும்பளங்கி நைட்’ஸின் ஃப்கத் பாசில் கதாபாத்திரத்தைப் போல் வெறுப்பைச் சம்பாதிக்கக்கூடியது. அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். இந்த இரு முக்கியக் கதாபாத்திரத்தையும் திருத்தமாக உருவாக்கியுள்ளார் இயக்குநர்.

ஆனால், ஆன் ஷீத்தலின் கதாபாத்திர வடிவமைப்பில் திருத்தமின்மை வெளிப்பட்டுள்ளது. முதல் பாதியில் பார்வையாளர் களுக்குக் காட்டப்படும் ஆன் ஷீத்தல், பத்தோடு ஒன்றாகத்தான் இருக்கிறார். நெருக்கடியான சூழலிலும் அவர் திமிரவில்லை.

அவர் இரண்டாம் பாதியில் திடமேறித் திமிர்வது ஏற்புடையதாக இல்லை. இதனால் படம் உடைந்த இரு வேறு கண்ணாடிப் பாத்திரத்தின் துண்டுகள்போல் உள்ளது.

தங்களுக்கு நேர்ந்த பாதிப்பு என்பதைவிட அந்தச் சம்பவத்தைத் தன் ஆண்மைக்கு நேர்ந்த அவமானமாகக் கருதுகிறான் நாயகன். இந்த ஆண் மனம் படத்தின் மறுபாதியில் நிகழ்த்தும் போராட்டம்தான் படம்.

 வழக்கமாக சினிமாக்களில் பார்த்த பழிக்குப் பழி கதைபோல் மேலோட்டமாகத் தெரிந்தாலும் இந்தக் காரியத்தைச் செய்யும் ஆண் மனத்தை உளவியல் பூர்வமாக அணுகிறது படம்.

மறுபுறம் கலாச்சாரக் காவலர்களின் மனத்தில் திரளும் ஆண்மையச் சிந்தனையையும் படம் மறைமுகமாகச் சித்தரிக்கிறது. ஆண் கொண்டாட்ட சினிமாக்களின் ஒன்றாக மாறியிருக்க வேண்டிய இந்தப் படத்தை இந்த அம்சங்கள் விசேஷமானதாக மாற்றியிருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x