Last Updated : 14 Dec, 2018 10:46 AM

 

Published : 14 Dec 2018 10:46 AM
Last Updated : 14 Dec 2018 10:46 AM

லயோலா-லைவ் பட விழா: அறியப்படாத சினிமாவுக்கு அறிமுகம்!

சொந்த மண்ணிலிருந்து வேறொரு நாட்டுக்குச் சென்று வாழும் மனிதர்களின் வாழ்க்கை உலக சினிமாவில் ‘புலம்பெயர் சினிமா’ என்ற தனித்த வகையாகவே வளர்ச்சிபெற்றிருக்கிறது.

இனப் பிரச்சினை, மதப் பிரச்சினை, வேலையின்மை உள்ளிட்ட உள்நாட்டுச் சிக்கல்களால் புலம்பெயர்ந்து செல்பவர்களே அதிகம். அப்படிக் குடியேறும் நாட்டில் வேர்பிடிக்க, அவர்கள் படும் போராட்டம், பெரும் அடையாளச் சிக்கலையும் கலாச்சாரச் சிக்கலையும் உள்ளடக்கியது. இலங்கையிலிருந்தும் தமிழகத்திலிருந்தும் பல்வேறு ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் குடும்பத்துடன் புலம்பெயர்ந்து வாழும் பல தமிழ் இளைஞர்கள், தரமான  ‘புலம்பெயர் தமிழ் சினிமா’வை உருவாக்கி வருகிறார்கள். அவர்களில் கனடா நாட்டில் இயங்கிவரும் லெனின் எம்.சிவம், பிரான்ஸில் இயங்கும் ஷோபா சக்தி, சதாபிரன், லாரன்ஸ் வலின், சிங்கப்பூரில் இயங்கிவரும் கே.ராஜகோபால், மலேசியாவில் இயங்கிவரும் தஞ்சை குமார் பெருமாள் ஆகியோரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

இவர்களில் கே.ராஜகோபால் இயக்கத்தில் கடந்த 2016-ல் வெளியான படம், ‘எ எல்லோ பேர்டு’ (A yellow bird).  அவ்வாண்டின் கான் திரைப்பட விழாவில் அதிகாரபூர்வத் திரையிடலுக்குத் தேர்வாகி உலக சினிமா ரசிகர்களைக் கவர்ந்தது. தற்போது இந்தப் படத்தை, சென்னை லயோலா கல்லூரியின் 'லைவ்' (Loyola Institute of Vocational Education) துறை நடத்தும் உலகப் படவிழாவில் தொடக்கப் படமாகத் திரையிடப்பட இருக்கிறது. ‘லைவ்’ துறையில் திரைப்படம், ஊடகம் ஆகியவற்றைப் பயிலும் மாணவர்களும் அவற்றைப் cinemajpg பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும் இணைந்து கடந்த நான்கு ஆண்டுகளாக ‘லைவ்-உலகப் படவிழா’வை ஒருங்கிணைத்துவருகிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் ஒரு மையக் கருத்தின் கீழ் படங்களைத் தேர்வுசெய்து திரையிடுவது இப்படவிழாவின் மற்றொரு சிறப்பு. கடந்த ஆண்டு 'சுற்றுச் சூழல் பாதுகாப்பு' என்ற தலைப்பில், 12 சிறந்த படங்கள் திரையிடப்பட்டன. ஒவ்வொரு திரையிடலுக்குப் பின்னரும் கலந்துரையாடலும் நடத்தப்பட்டது. விஜய் சேதுபதி, மிஷ்கின், பி.சி.ஸ்ரீராம், லிஜோ  ஜோஸ் பெல்லிசேரி, சதீஷ் மான்வர், எஸ்.பி.ஜனநாதன், அபு ஷாகித் எமோன், நலன் குமாரசாமி, பிஜு, லெனின் பாரதி, எடிட்டர் கர் பிரசாத் உள்ளிட்ட பல தமிழ்த் திரையுலக ஆளுமைகள் கலந்துகொண்டு மாணவர்களுடன் உரையாடினார்கள்.

நான்காவது ஆண்டாக  2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 முதல்  22  தேதி வரை நான்கு  நாட்கள் நடக்கவிருக்கும் ‘லைவ் – உலகப்படவிழா’வில் ‘புலம் பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகளின் வாழ்க்கை’ என்பதை  மையக் கருவாகக் கொண்டு உருவான திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன. அந்தப் படங்களின் பட்டியலில் ‘எ எல்லோ பேர்டு’ (A yellow bird) முதன்மை வகிக்க அது சிறந்த ‘புலம்பெயர் சினிமா’ என்பதோடு, அதன் இயக்குநர் திரையிடலின் முடிவில் பார்வையாளர்களுடன் கலந்துரையாட வருகிறார் என்பதும் முக்கியத்துவம் பெருகிறது. “சிங்கப்பூரில் புலம்பெயர்ந்து வாழும் இந்திய, சீன மனிதர்களின் வாழ்க்கையையும் அவற்றில் மலிந்திருக்கும் அடையாளச் சிக்கலையும் அழுத்தமாகவும் இயல்பாகவும் பேசியிருக்கும் படமே ‘எ எல்லோ பேர்டு’. 

அந்தப் படத்தின் இயக்குநர் உடனான உரையாடல் ‘லைவ் உலகப்பட விழாவின் மையக் கருத்து பற்றிய புரிதலை உருவாக்கும். புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் சொர்க்கபுரியில் வாழ்பவர்கள் என்ற நமது புரிதல் மாறும். அதேபோல புலம்பெயர் சினிமா வகையை அறிமுகப்படுத்துவதும் இந்தப் படவிழாவின் முக்கிய நோக்கம்” என்கிறார் லயோலா கல்லூரியின் முதல்வர் அருட்தந்தை ஆன்டரூ. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்து தமிழ் நாளிதழ் இப்படவிழாவை பிரிண்ட் மீடியா பார்ட்னராக இணைந்து முன்னெடுக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x