

தமிழ்நாடு அரசு திரைப் படக் கல்லூரியில் 94இல் இயக்கம் பிரிவில் படித்து முடித்தேன். உதவி இயக்குநராகச் சில ஆண்டுகள் பயணித்தபின், 97இல் என்னுடைய முதல் படமான ‘முருகா’வை இயக்கினேன். அது ஒரு ஆவரேஜ் படம். அடுத்து ஒரு படம் இயக்கினால் அது பெரிய வெற்றிப் படமாக மட்டுமே இருக்க வேண்டும் என்கிற உறுதியுடன் ஓடிக்கொண்டிருந்தபோதுதான் ‘வேலாயுதம்’
படத்தின் செட்டில், அந்தப் படத்தின் உதவி இயக்குநராக விஜய் அண்ணா வைச் சந்தித்தேன். படப்பிடிப்பு முடியும் தறுவாயில் அவரிடம் ‘அண்ணா சின்னதா ஒரு கதை வச்சிருக்கேன், சொல்லட்டுமா?’ என்றேன். ‘ஓகே’ என்றார். கதையைக் கேட்டு முடித்ததும் ‘சொந்த ஊரு மதுரையா?’ என்றார். ‘ஆமாண்ணே.. மதுர பக்கத்துல’ என்றதும் ‘சரி பண்ணுவோம்; நான் சொல்றேன்’ என்றார். நான் சொன்ன ‘ஜில்லா’ படத்தின் கதை மதுரையை மையமாகக் கொண்டது. அதுவரை மதுரையைப் பூர்விகமாகக் கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் கதைக்களத்தில் விஜய் அண்ணா நடித்திருக்க வில்லை என்று நினைக்கிறேன். அதேபோல், மதுரை வட்டார வழக்கின் சாயலை விஜய் அண்ணாவின் பேச்சில் சில இடங்களிலாவது படத்தில் கொண்டு வர வேண்டும் என்கிற எண்ணமும் எனக்கு இருந்தது. அது படத்தில் நான் நினைத்தபடியும் அமைந்தது.