

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த வாரம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது ‘ரெட்ரோ’ திரைப்படம். ஆனால், விமர்சனங்களைக் கடந்து 105 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி பாக்ஸ் ஆபீஸ் வெற்றியைப் பெற்றுள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்த சூர்யா, அகரம் ஃபவுண்டேஷன் அறக்கட்டளைக்கு இதுவரை கிடைத்துள்ள லாபத்திலிருந்து 10 கோடி ரூபாயை நன்கொடையாக அள்ளிக்கொடுத்திருக்கிறார்.
இச்சமயத்தில் அவர் எழுதியுள்ள கடிதத்தில்: “அனைவருக்கும் அன்பு நிறைந்த வணக்கம். பகிர்தலே மிகச் சிறந்த மகிழ்ச்சி. ‘ரெட்ரோ’ திரைப்படத்துக்கு நீங்கள் அளித்துள்ள பேராதரவு, மகிழ்ச்சியான வெற்றியைப் பரிசளித்து இருக்கிறது. நீங்கள் எனக்கு அளித்திருக்கும் அடையாளத்தை, அர்த்த முள்ளதாக மாற்றவே அகரம் ஃபவுண்டேஷன் தொடங்கப்பட்டது. அனைவரின் பங்களிப்போடு பல ஆயிரம் மாணவர்களின் வாழ்வில் கல்வி மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கி இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும், நம்பிக்கையோடு அகரம் ஃபவுண்டேஷனுக்கு விண்ணப்பிக்கிற பல ஆயிரக்கணக்கான மாணவர்களில், மிகக் குறைவானவர்களுக்கே உதவ முடிகிறது. அந்த எண்ணிக்கையை உயர்த்த வேண்டுமெனில், பங்களிப்பும் உயர வேண்டும். அதன் முதல் படியாக, ரெட்ரோ திரைப்படத்துக்கு நீங்கள் அளித்த பேராதரவின் மூலமாகக் கிடைத்த அன்பு தொகையில், பத்து கோடி ரூபாயை இந்தக் கல்வியாண்டில் அகரம் ஃபவுண்டேஷனுக்கு பகிர்ந்தளிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கல்வியே ஆயுதம்.கல்வியே கேடயம். அன்புடன், சூர்யா.” என்று குறிப்பிட்டுள்ளார்.