

தன்னிடம் அடைக்கலம் தேடி வருகிற எல்லாக் காதலர்களையும் சேர்த்து வைக்கும் ஒருவன், தன்னுடைய காதலில் தோற்று நிற்பதுதான் 2001இல் வெளிவந்த ‘ஷாஜகான்’ படத்தின் கதை. புத்தாயிரத்தின் புத்தம் புதுக் காதல் கதையாக வெளியாகி, 125 நாள் ஓடிய இப்படத்தில், உணர்வு பொங்கும் காதல் காட்சிகளுக்கு இணையாகச் சண்டைக் காட்சிகளும் பேசப்பட்டன. ‘ஆக்ஷனில் விஜயின் அர்ப்பணிப்பு மிகுந்த அடுத்த கட்டப் பாய்ச்சல்’ என்று விமர்சகர்கள் சிலிர்த்தனர். அதுவரை டீன் இளைஞன் என்கிற தோற்றத்திலிருந்து சற்று முதிர்ந்த 30 வயதுக்குரிய முதிர்ச்சியான விஜயின் அழகில் சொக்கிய ரசிகைகள் அவரை மனதில் பச்சை குத்திக்கொள்ள வைத்தது ‘ஷாஜகான்’. இப்படத்தை எழுதி, இயக்கிய அறிமுக இயக்குநர் அ.ரவி, இயக்கினால் விஜயை மட்டுமே வைத்து எனது முதல் படத்தை இயக்குவேன்’ என்கிற மன உறுதியுடன் பிடிவாதமாக மாரத்தான் ஓடி அதைச் சாதித்தார். ‘ஷாஜகான்’ படம் உருவான நாள்களை தனது மனப் பதிவாக ப்ரியமுடன் பகிரத் தொடங்குகிறார்:
“நான் உதவி இயக்குநராக சினிமாவில் 92இல் நுழைந்தபோதுதான் விஜய் அறிமுக மான ‘நாளைய தீர்ப்பு’ படம் ரிலீஸ் ஆகிறது. உண்மையிலேயே அந்தப் படத்தை நான் பார்க்கவில்லை. தமிழ், தெலுங்குப் படங்களில் உதவி இயக்குநராகப் பல ஆண்டுகள் கடந்துவிட்டன. அப்போது விஜய் மிகப்பெரிய ஹீரோவாக வளர்ந்து விட்டிருந்தார். எங்கே பார்த்தாலும் யாரைக் கேட்டாலும் சினிமா என்றால் ‘விஜய்..விஜய்..’ என்று பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தக் கணத்தில் முடிவு செய்தேன; எனது முதல் படத்தில் விஜய்தான் ஹீரோ என்று.