

அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு உள்பட்ட வைக்கத்தில் 1923, நவம்பர் 30ஆம் தேதி பிறந்தார், வைக்கம் நாராயணி ஜானகி என்கிற வி.என்.ஜானகி. அவரின் தந்தையான ராஜகோபால், தற்போதைய நாகை மாவட்டம் போகலூரைச் சேர்ந்தவர். தமிழாசிரியரான இவர், திரைப்படங்களுக்குப் பாடல் எழுதியிருக்கிறார். இவருடன் பிறந்த சகோதரர்தான் திரைப்படப் பாடல்களுக்குப் பேர் போனவரான பாபநாசம் சிவன். கும்பகோணத்தில் பள்ளிப் படிப்பை முடித்த ஜானகி அம்மா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம், மராட்டியம் என்று பல மொழிகளைக் கற்றுக்கொண்டார்.
பரதம், மோகினி ஆட்டம், குச்சிப்புடி போன்ற கலைகளில் தேர்ச்சி பெற்று தென்னகம் முழுவதும் மேடை நிகழ்ச்சிகளில் வலம் வந்தார். சிலம்பம், கத்திச் சண்டை போன்ற தற்காப்புக் கலைகளையும் கற்றவர். தேசாபிமான இயக்குநர் கே.சுப்ரமணியம் உரு வாக்கிய ‘நிருத்யோதயா’ நடனப் பள்ளியில் முறையான நடனம் கற்றுக் கொண்டவர். கே.சுப்ரமணியம்தான் இவரை சினிமாவுக்கு அழைத்து வந்தார்.
பிரிக்க முடியாத சொத்து: 1937இல் தொடங்கி 1953 வரை யிலும் கதாநாயகியாகவும் நடனக் கலைஞராகவும் இவர் நடித்த படங்கள் 31. அவற்றில் ‘சாந்த சக்குபாய்’, ‘சகுந்தலா’, ‘கச்ச தேவயானி’, ‘அனந்த சயனம்’, ‘ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி’, ‘வேலைக்காரி’, ‘தேவகி’ உள்ளிட்ட படங்கள் குறிப்பிடத்தக்கவை. எம்.கே. தியாகராஜ பாகவதருடன் ‘ராஜமுக்தி’ படத்தில் ஜானகி நடித்தபோது, அதில் உடன் நடித்த எம்.ஜி.ஆருடன் நட்பு உருவானது.
அதைத் தொடர்ந்து ‘மருதநாட்டு இளவரசி’, ‘மோகினி’, ‘நாம்’ உள்பட பல படங்களில் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்திருந்த அவர், அப்போதிலிருந்தே எம்.ஜி.ஆரின் நிழலைப் போலவே இருந்திருக்கிறார். ‘மருதநாட்டு இளவரசி’ படத்தில் எம்.ஜி.ஆர். வாங்கிய ஊதியத்தைவிட ஜானகி அம்மா வாங்கிய ஊதியம் அதிகம். ஒரு கட்டத்தில் திரை நடிப்பில் தனது ஈடுபாட்டைக் குறைத்துக் கொண்டாலும் 1956இல் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் தொடங்கியபோது அதன் முக்கியமான பங்குதாரர்களில் ஒருவராக இருந்தார் ஜானகி அம்மா. அப்போதே பெரும் முதலீட்டில்
எம்.ஜி.ஆர். தயாரித்து, இயக்கி, நடித்து மாபெரும் வெற்றி கண்ட ‘நாடோடி மன்னன்’ படத்துக்குப் பக்கபலமாக இருந்தார். 1962இல் எம்.ஜி.ஆருக்கும் - ஜானகிக்கும் பதிவுத் திருமணம் நடைபெற்றது. ஜானகி அம்மாவின் சகோதரரான நாராயணன் - சீதாதேவி தம்பதியரின் மூத்த மகள்தான் என்னுடைய தாயாரான லதா ராஜேந்திரன். எங்கள் அம்மாவும் சரி, நானும் சரி சிறுவயதில் வளர்ந்தது ராமாவரம் தோட்டத்தில்தான். தாம் வளர்த்த பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டார்கள் எம்.ஜி.ஆரும் ஜானகி அம்மாவும்.
“தோட்டத்தம்மா” என்றுதான் எங்கள் பாட்டியும் தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சருமான வி.என்.ஜானகி அம்மாவை அழைப்போம். ஜானகி அம்மா அடிக்கடி எங்களிடம் சொல்லும் ஒரு வார்த்தையை எங்களால் மறக்க முடியாது. “எந்தச் சொத்தையும் உன்னிடம் இருந்து பிரிக்கலாம். ஆனால், கல்வி, திறமை, நீ கற்றுக்கொள்ளும் கலைகள் போன்றவற்றை யாராலும் உன்னிடமிருந்து பிரிக்க முடியாது.”
அறமும் ஆற்றலும்: ராமாவரம் தோட்டத்தில் நாங்கள் வளர்ந்தபோது, மாடியில் இருக்கும் எம்.ஜி.ஆருக்கு காலையில் நாளிதழ் களை எடுத்துக் கொண்டுபோய் கொடுப்பது வழக்கம். அப்போது, என்னிடம் பள்ளிப் பாடத்திலிருந்து சிறுசிறு கேள்விகள் கேட்டு, நான் நன்றாகப் படிக்கிறேனா எனத் தெரிந்து கொள்வார், நாங்கள் ‘சேச்சா’ எனப் பாசமுடன் அழைக்கும் எம்.ஜி.ஆர்.தரையில் உட்கார்ந்து சாப்பிடுவது எம்.ஜி.ஆரின் வழக்கம்.
குடும்பத்தினருடன் அமர்ந்து சாப்பிடுவதை அதிகம் விரும்புவார். எங்கள் அனைவருக்கும் அகம் மலர்ந்த முகத்துடன் உணவைப் பரிமாறுவார் ஜானகி. எளிமையான வாழ்வை வாழ்வதற்கு இருவருமே முன்னுதாரணமாக இருந்தார்கள். ராமாவரம் தோட்டத்துக்கு யார், எப்போது வந்தாலும், அவர்கள் சொல்லும் முதல் வார்த்தை, “வாங்க சாப்பிடுங்க” என்பதுதான்.
தமிழ்ப் பண்பாட்டை, அதன் ஆகப்பெறும் அறத்தைத் தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் கடைப்பிடித்து வாழ்ந்தவர் ஜானகி அம்மா. காலை யில் எழுந்ததும் ‘காலை வணக்கம்’ என்று சொல்லும்படி எங்களைப் பழக்கப்படுத்தியிருந்தார். பொங்கல் பண்டிகையன்று தோட்டத்தில் உள்ள அனைவருக்கும் ஒரே மாதிரியான புத்தாடையை வழங்கி, தமிழர் திருநாளை அவர்கள் குடும்பத்தின் முதன்மைப் பண்டிகையாகக் கொண்டாடி வந்தனர் எம்.ஜி.ஆரும் ஜானகி அம்மாவும். உதவி கேட்டு வருபவர்களிடம் எம்.ஜி.ஆர்.கொடுக்கச் சொன்ன தொகையைவிடக்கூடுதலான தொகையை அள்ளிக் கொடுப்பது ஜானகி அம்மாவின் வெளித்தெரியாத கொடையுள்ளம். எவ்வளவு நெருக்கடியான சூழ்நிலை யையும் துணிவுடன் எதிர்கொள்ளும் ஆற்றல் அவருக்கு உண்டு.
பாசமும் பிணைப்பும்: 1967இல் ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆர். மீது எம்.ஆர்.ராதா துப்பாக்கிச் சூடு நடத்தினார். அப்போதும் சரி, பின்னர் 1984இல் உடல் நலக் குறைவால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோதும் சரி, மருத்துவ மனையில் தாயைப் போல் எம்.ஜி.ஆரை அருகில் கண்ணும் கருத்து மாகக் கவனித்துக் கொண்டவர் ஜானகி அம்மா. பிரபலமான பத்திரிகை ஒன்று ‘எமனிடமிருந்து எம்.ஜி.ஆரை மீட்டு வந்தவர்’ என்று ஜானகி அம்மாவைப் பற்றிக் குறிப்பிட்டது. அதிமுக தொடங்கப்பட்ட நாளிலிருந்து அதன் வளர்ச்சிக்குப் பின்னால், எம்.ஜி.ஆரின் நிழலைப்போல் உடனிருந்து அவரை ஆற்றுப்படுத்தி, தடையில்லாமல் அரசியல் பணியாற்றும் சூழலை ஏற் படுத்திக் கொடுத்தவர் ஜானகி அம்மா.
சென்னை ‘லாயிட்ஸ் லேன்’-இல் எம்.ஜி.ஆருடன் வசித்தபோது ஜானகி அம்மாவின் சொந்த வரு மானத்தில் வாங்கப்பட்ட அவ்வை சண்முகம் சாலையில் இருந்த மனையும் கட்டிடமும்தான் தற்போது அதிமுகவின் தலைமை அலுவலகமாக இருக்கிறது. திருமண மண்டபமாக இருந்த இடத்தை 1972இல் அதிமுக தொடங்கப்பட்டதும் அதன் அலுவல கத்துக்குத் தாமே முன்வந்து கொடுத்த வர், பின்னர் கட்சியின் நலனுக்காக 1987இல் கழகத்துக்கே தானமாக எழுதிக் கொடுத்துவிட்டார் ஜானகி.
ஜானகி அம்மாவுக்கு அமெரிக் காவில் இதய அறுவை சிகிச்சை நடந்தபோது, கண்ணீர் விட்டுக் கதறி “என் ஜானு இதைத் தாங்குவாளா?” என்று அரற்றியபடி நாள் முழுவதும் சாப்பிடாமல், சொட்டுத் தண்ணீரும் குடிக்காமல் தன்னை வருத்திக் கொண்டு உபவாசம் இருந்தார் எம்.ஜி.ஆர். அந்த அளவுக்கு இருவருக்குமிடையிலான பாசப் பிணைப்பு இருந்தது.
தொலைநோக்கும் தியாகமும்: 1987ஆம் ஆண்டு எம்.ஜி.ஆருடைய மறைவுக்குப் பிறகு தமிழ்நாட்டில் முதல் பெண் முதலமைச்சரானார். அப்போது மிகப்பெரிய பொறுப்பில் அமர்ந்திருக்கிறோம் என்கிற பெருமித உணர்வு அவருக்குச் சிறிதும் இல்லை. அவருடைய ஆட்சி குறுகிய காலத்திலேயே கலைக்கப்பட்டபோது, அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்தது. இரட்டை இலைச் சின்னம் பறிக்கப்பட்டது. அப்போது நடந்த தேர்தலில் ஆண்டிப்பட்டித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறாத நிலையிலும் அவர் கலங்க வில்லை.
அதன்பிறகு அவர் எடுத்த முடிவு தான் அரசியலில் வியப்பிற்குரிய ஒன்றாக இன்றைக்கும் மதிப்பிடப்படு கிறது. ஜா - ஜெ அணி என்று இரு பிரிவுகளாகப் பிரிந்திருந்த அதிமுகவை ஒன்றிணைத்து ஜெயலலிதாவிடம் கட்சித் தலைமைப் பொறுப்பையும் கட்சி நிதியையும் ஒப்படைத்த ஜானகி அம்மாவின் தொலைநோக்குப் பார்வையும் தியாகமும் ஒரு நல்ல அரசியல்வாதிக்கு இருக்க வேண்டிய முன்மாதிரிப் பண்பு. அன்று அவர் எடுத்த இணைப்பு முடிவின் விளைவாக அதிமுக மறுபடியும் பெரும் பலத்துடன் ஆட்சியைப் பிடித்தது. அதிமுகவின் பிரம்மாஸ்திரமாக வர்ணிக்கப்படும் இரட்டை இலை சின்னத்தை அதிமுகவுக்கே மீட்டுத் தந்த பெருமைக்குரியவர் ஜானகி அம்மையார்.
எம்.ஜி.ஆர். எழுதி வைத்த உயிலின்படி வாய்பேச முடியாத, காது கேளாதோர் பள்ளி உருவாக உதவினார். எம்.ஜி.ஆருக்கான நினைவில்லம் உருவாக்கினார். ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில் ‘என் மனதை நானறிவேன், என் உறவை நான் மறவேன்’ என்று பாடியிருப்பதைப் போல், ஜானகி அம்மா என்கிற அற்புதமான மனிதர், கலை வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை என அனைத்துப் பரிமாணங்களிலும் மற்றவர்க்கு அன்னமிட்ட கை. அவர் எம்.ஜி.ஆரைப் போல் மக்கள் மனதில் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்.
- கட்டுரையாளர், வழக்கறிஞர், கல்வியாளர், எம்.ஜி.ஆரின் பேரன்; தொடர்புக்கு: ma@kumarrajendran.in