கோலிவுட் ஜங்ஷன்: சூர்யாவின் ஆறுதல்!
பட வெளியீட்டின்போது ஏற்படும் அமளி, கைகலப்பு ஆகியவற்றில் சிக்கி எதிர்பாராமல் இறந்துவிடும் ரசிகர்களுக்கு, சம்பந்தப்பட்ட படத்தின் ஹீரோ, வீடு தேடி சென்று ஆறுதலும் பொருள் உதவியும் வழங்குவது உண்டு. சூர்யா நமது ரசிகர்களின் விஷயத்தில் அதிக மனிதாபிமானத்துடன் நடந்து கொள்பவர். தனது நற்பணி இயக்கத்தைச் சேர்ந்த அரவிந்த் என்கிற 24 வயது இளைஞர் கடந்த சில தினங்களுக்கு முன் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இதை அறிந்த சூர்யா, எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் எண்ணூரில் உள்ள அந்த ரசிகரின் வீட்டுக்கு நேரில் சென்று தனது அஞ்சலியை செலுத்திவிட்டு, அவரின் பெற்றோருக்கு நம்பிக்கை கொடுத்து திரும்பி இருக்கிறார். ரசிகர்களை வாகனம் ஓட்டும்போது கூடுதல் கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
‘பித்தல மாத்தி’ வேலைகள்! - சினிமா, தொலைக்காட்சி இரண்டிலும் தன் திறமையைக் காட்டி வருபவர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமைய்யா. ஜீதமிழ் தொலைக்காட்சியில் கரோனா ஊரடங்கு காலத்தில் பார்வையாளர்களைத் தன்வசப்படுத்தி ‘சர்வைவர்’ ரியாலிட்டி ஷோவின் போட்டியாளர்களில் ஒருவராகப் பங்குபெற்று, காட்டுக்குள் தனியாக வசித்து வந்த உமாபதி ராமையா தற்போது படங்களில் நாயகனாக பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். அவற்றில் ‘பித்தல மாத்தி’ அடுத்த மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. மாணிக்க வித்யா இயக்கத்தில் சம்ஸ்கிருதி நாயகியாக நடித்துள்ளார்.
மேலும் பால சரவணன், வினுதா லால், தேவதர்ஷினி, வித்யூலேகா ராமன், ‘ஆடுகளம்’ நரேன், ‘காதல்’ சுகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். படம் பற்றி இயக்குநர் கூறும்போது “பித்தல மாத்தி என்றால் தகிடு தத்தம் செய்பவர்களைக் குறிக்கும். கதையின் நாயகன் அவரது வாழ்க்கையில் நல்லது எது, கெட்டது எது என்பதைத் தெரிந்து கொண்டு, எம்மாதிரியான பித்தல மாத்தி வேலைகளைச் செய்து வாழ்க்கையில் முன்னேறுகிறார் என்பதுதான் படத்தின் கதை” என்கிறார். ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் சார்பில் ஜி. சரவணன்
படத்தைத் தயாரித் திருக்கிறார்.லைகா வாங்கிய ‘மில்லர்’ - சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ’சாணிக் காயிதம்’ புகழ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்ததுள்ள படம் ‘கேப்டன் மில்லர்’. பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடித்திருக்கிறார். ‘ஜெயிலர்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமாகியிருக்கும் கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு ரசிகர்களுக்குப் பரிச்சயமான தமிழ் நடிகர் சந்தீப் கிஷன் ஆகியோரும் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்றுள்ள இப்படம் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள். இதையொட்டி படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இன்னும் இசை, டிரைலர் வெளியீடு, விளம்பர நடவடிக்கைகள் எதுவும் நடக்காத நிலையில் இப்படத்தின் வெளிநாட்டுத் திரையரங்கு விநியோக உரிமையை லைகா புரொடக் ஷன்ஸ் வாங்கியிருக்கிறது. படம் குறித்து இயக்குநர் கூறும்போது “இது 1930இல் நடக்கும் ஒரு போராளியின் கதை. இலங்கைத் தமிழர்களின் மனதுக்கு நெருக்கமான ஒன்றாக இருக்கும். ஆனால், எனது முந்தைய படங்களைப் போல் அதிகமான வன்முறைக் காட்சிகள் இப்படத்தில் இருக்காது” என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
