Published : 11 Jul 2014 11:24 AM
Last Updated : 11 Jul 2014 11:24 AM

சிம்பு - ஹன்சிகா: ஒளித்து வைத்த காதல்?

மதயானைக் கூட்டம், ஹரிதாஸ் போன்ற பல முக்கியமான படங்கள் கண்டுகொள்ளப்பட வில்லை என்ற குற்றச்சாட்டு இம்முறை விஜய் தொலைக் காட்சியின் விருது விழா பற்றி கிளப்பப்பட்டது. இதுவொருபுறம் இருக்க, விருது நிகழ்ச்சியில் நிகழ்ந்த ஒரு பரபரப்பான காட்சி, எஸ்.டி.ஆர். சிம்பு - ஹன்சிகா ஜோடியின் முறிந்துபோய்விட்டதாக அவர்கள் இருவரும் அறிவித்த காதல் குறித்த சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறது.

நடந்தது இதுதான். விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் நடிகைகளிடம் மைக்கை நீட்டி முழங்கிக்கொண்டிருந்தார் நிகழ்ச்சித் தொகுப்பாளர் திவ்யதர்ஷினி. சுடச்சுட வெளியாகி ஹிட் அடித்திருக்கும் அரிமா நம்பி படத்தின் நாயகி ப்ரியா ஆனந் எதிர்ப்பட, அவரிடம் மைக்கை நீட்டி வரிசையாகக் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார். அதில் ஒரு கேள்வி...

“விஜய் அமலாபால் கல்யாணம் முடிஞ்சு அவங்க ஹனிமூனும் போயிட்டு வந்தாச்சு. கோடம்பாக்கத்துல அடுத்த காதல் கல்யாணம் எது? உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்க” என்று கேட்டு வைத்தார். ப்ரியா ஆனந்த் நமக்கு ஏன் வம்பு என்று “அடுத்த கேள்வியைக் கேளுங்க” என்று சொல்லி நழுவியிருக்கலாம்.

ஆனால் கொஞ்சமும் யோசிக்காமல் படக்கென பதில் சொன்னார் ப்ரியா ஆனந்த். அவர் சொன்ன பதில்: “அடுத்த லவ் மேரேஜா? சிம்புவுக்கும் ஹன்சிகாவுக்கும்தான்”. இந்தப் பதில் அங்கிருந்த அத்தனை பேரையும் சலசலப்பில் ஆழ்த்தியது. இத்தனைக்கும் ப்ரியா ஆனந்தின் அருகிலேயே அமர்ந்திருந்தார் ஹன்சிகா மோத்வானி.

இந்தப் பதிலைக் கேட்டு வெடுக்கென்று கோபப்படுவார் ஹன்சிகா என்று பார்த்தால், ப்ரியா ஆனந்த் சொன்ன பதில் புரிந்துவிட்டதுபோலக் கண்கள் அகலமாய் விரித்து அதில் காதல் ஒளிரப் புன்னகைத்தார். ப்ரியாவின் பதிலையும் ரசித்தார்.

ஊடகங்களுக்காகவும், பரபரப்பான செய்திகளில் அடிபட வேண்டும் என்பதற்காகவும் இரண்டுபேரும் காதலை ஒளித்துவைத்து விளையாடுகிறார்களோ என்ற சந்தேகத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x