

1 சொத்துத் தகராறுகளை நீதிமன்றத்துக்கு வெளியே சமரசமாகத் தீர்க்க என்னென்ன வழிகள் உள்ளன?
சொத்துத் தகராறுகள் ஏற்பட்டால், அவற்றை தீர்க்க நீதிமன்றம் மட்டும்தான் ஒரே வழி என்றில்லை. நீதிமன்றத்துக்கு வெளியே சமரசமாகத் தீர்க்க சட்டப்படியாக அங்கீகரிக்கப்பட்ட பல வழிகள் உள்ளன.
பொதுவாக சிவில் நடைமுறைச்சட்டம் (CPC) 1908இன் பிரிவு 89 படி நீதிமன்றமே வழக்குகளை சமரச முறைகளுக்கு அனுப்ப அதிகாரம் உள்ளது. அதன்படி, மத்தியஸ்தம் (Mediation) மூலம் ஒரு மத்தியஸ்தர் இரு தரப்பிலும் சுமூகமாக பேசி சமரசம் செய்து வைக்கலாம். இதற்கு மேலாக, நேரடி பேச்சுவார்த்தை (Negotiation) மூலமாகவும் இரு தரப்பும் தாமாகவே சமரசம் செய்து கொள்ளலாம்.
மேலும், லீகல் சர்வீசஸ் அத்தாரிட்டிஸ் சட்டம் 1987 படி லோக் அதாலத் எனும் மக்கள் நீதிமன்றங்கள் மூலமாகவும் விரைவாகவும், எந்த செலவின்றியும் தீர்வைப் பெற முடியும். லோக் அதாலத் மூலமாக காணப்படும் தீர்ப்பு சிவில் நீதிமன்ற தீர்ப்புக்கு சமமானது. அந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இயலாது.
மேலும் குடும்பத்துக்குள் ஏற்படும் சொத்து பிரச்சினைகளை, பேமிலி செட்டில்மெண்ட் எனப்படும் குடும்ப சமரசம் மூலமாகவும் தீர்வு காணலாம். இதுவும் சட்டப்படி செல்லத்தக்கதே.
இதுபோன்ற வழிமுறைகளால் நேரம் விரயமாவதை தடுத்து, செலவையும் குறைக்கலாம். அத்துடன் குடும்ப உறவுகளை பாதுகாக்கும் முக்கியமான வழிமுறைகள். குறிப்பாக குடும்பத் தகராறுகளில், மத்தியஸ்தம் மற்றும் குடும்ப சமரசம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
இவ்வாறான மாற்று தீர்வு முறைகள் (ADR mechanisms) நீதிமன்றங்களாலும் அதிகமாக ஊக்குவிக்கப்படுகின்றன. மேலும் சமரசம் மூலம் கிடைக்கும் தீர்வு, இரு தரப்பினருக்கும் ஏற்ற வகையில் நீடித்ததாக இருக்கும்.
பொதுவாக இதுபோன்ற குடும்ப பிரச்னை தொடர்பான வழக்குகளில் யாராவது ஒரு தரப்புக்கு மட்டும் தான் வெற்றி கிடைக்கும். ஆனால் இதுபோன்ற மாற்று முறை தீர்வுகளால் சமரசம் ஏற்பட்டு இருதரப்புக்கும் வெற்றி கிடைக்கும்.