

நிலவில் மனிதர்களைக் கால் பதிக்கச் செய்யும் திட்டத்தை மீண்டுமொருமுறை தள்ளிவைத்திருக்கிறது நாசா. அமெரிக்க விண்வெளி வீரர்கள் விண்கலத்தில் நிலவைச் சுற்றிவரும் ‘ஆர்ட்டிமிஸ் 2’ திட்டம் வரும் ஏப்ரல் மாதம் செயல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ‘ஆர்ட்டிமிஸ் 3’யின் நோக்கம் மாற்றப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ், புளூ ஆர்ஜின் நிறுவனங்களின் விண்கலங்களுடன் நாசாவின் ஒரையன் (Orion) விண்கலத்தை இணைப்பது குறித்த சோதனையை அது மேற்கொள்ளும் எனக் கூறியுள்ளது. அதேநேரத்தில், 2028இல் ‘ஆர்ட்டிமிஸ் 4’ மூலமாக நிலவில் மனிதர்களைத் தரையிறக்கத் திட்டமிட்டுள்ளது.
குறுங்காணொளி அபாயம்
சீனாவின் ஜெஜாங் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஓர் ஆய்வில் தொடர்ச்சியாக இன்ஸ்டகிராம் ரீல்ஸ், யூடியூப் ஷார்ட் வீடியோ பார்ப்பதால் பெருமளவில் கவனச்சிதறல் ஏற்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
தொடர்ந்து சில மணிநேரம் இந்தக் குறுங்காணொளிகளைக் காண்பவர்களை எலக்ட்ரோஎன்செஃபலோகிராஃபி அல்லது இஇஜி (EEG) நுட்பம் கொண்டு பரிசோதித்தபோது, அவர்களிடத்தில் தீட்டா (theta) மூளை அலை செயல்பாடு குறைந்தது தெரியவந்துள்ளது.
மூளையின் இயக்கம், முடிவெடுக்கும் திறனில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியாவில் குறுங்காணொளிகள் காணும் வழக்கமுள்ள 50 கோடி பேரில் பெரும்பாலானோர் பதின்ம வயதினர், இளைஞர்கள். அவர்களைக் காக்க வேண்டிய தருணம் இது..!