

நிதிசார் பரிவர்த்தனைகளில் ஒருவரின் நாணயத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கிய காரணியாக சிபில் மதிப்பெண் விளங்குகிறது. இதில் பதிவாகும் சிறிய தவறான தகவல் கூட புதிய கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகள் பெறுவதைத் தடுப்பதுடன், தனிநபரின் நிதிநிலையையும் நற்பெயரையும் கடுமையாகப் பாதிக்கக்கூடும்.
வங்கியின் அலட்சியத்தால் சிபில் அறிக்கையில் தவறான தகவல்கள் பதிவாகி நிதிப் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட வங்கியின் மீது சட்டப்படி வழக்குத் தொடரவும் இழப்பீடு பெறவும் கடன் பெற்ற நுகர்வோருக்கு முழு சட்ட உரிமையும் உண்டு.
2005ஆம் ஆண்டின் கடன் தகவல் நிறுவனங்கள் முறைப்படுத்தும் சட்டத்தின் (CIC Act) கீழ் நுகர்வோருக்குப் போதிய சட்டப் பாதுகாப்புகள் கிடைப்பதை இந்திய ரிசர்வ் வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.
கடன் வாங்கியவர் தன் சிபில் அறிக்கையில் பிழை உள்ளது எனச் சுட்டிக்காட்டினால், அதை முப்பது நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வங்கி சரிபார்க்க வேண்டும் என்பது ரிசர்வ் வங்கி உருவாக்கியுள்ள கட்டாய விதிமுறையாகும்.
ஆர்பிஐ-யின் தற்போதைய வழிகாட்டுதல்களின்படி, நுகர்வோர் புகார் அளித்த முப்பது நாட்களுக்குள் சிபில் பிழையை வங்கி திருத்தாவிட்டால், தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.100 வீதம் பாதிக்கப்பட்ட நபருக்கு வங்கி இழப்பீடாக வழங்க வேண்டும்.