

சத்து மாவில் வீரம், உதட்டுச் சாயத்தில் காதல், தங்க நகைகளில் பாசம் என மனித உணர்வுகளுக்கே விலைபேசும் போலி பிம்பங்களின் மாய உலகில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மனிதரின் சுய உழைப்பையும் உள்ளார்ந்த அன்பையும் அடியோடு புறந்தள்ளிவிட்டு, ‘பொருட்களே வாழ்வின் வெற்றியைத் தீர்மானிக்கும்’ என்ற பொய்யை விளம்பரங்கள் நம் ஆழ்மனதில் விதைக்கின்றன.
தாய்ப்பால் ஊட்டாத பலத்தையும், தன்னம்பிக்கை தராத அழகையும் ஒரு நுகர்பொருள் தந்துவிடும் என்ற மாயவலையில் மனித மனங்களைச் சிறைபிடித்திருக்கும் இந்த ஆரோக்கியமற்ற வணிக உலகைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய தருணம் இது.
“நான் எந்தத் தவறும் செய்யாத நிலையிலும், உன் பக்கத்தில் இருந்த ஒரே காரணத்துக்காக... நீ அறுபட்ட செருப்பாய் எறியப்பட்டபோது, நானும் தூக்கி எறியப்பட்டேன்!” என்ற ஒரு செருப்பின் புலம்பல், இன்றைய நுகர்வு வெறியின் கோர முகத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
“பழுதானாலும் பழுதுபார்த்து மீண்டும் பயன்படுத்து” என்ற நம் முன்னோர்களின் உன்னதப் பண்பாடு மறைந்து, “பயன்படுத்து; பயன் முடிந்தால் தூக்கி எறி” (Use & Throw) என்ற பேராசை கலாச்சாரம் இன்று மேலோங்கிவிட்டது.
இந்த நுகர்வுப் போக்கு பொருட்களோடு நிற்காமல், மனித உறவுகளையும் தூக்கி எறியும் கொடூரத்தை விதைத்துள்ளது. அரக்கோணத்தில் உடல்நலம் குன்றிய 72 வயது தாயைச் சுமையாகக் கருதி, ஓடும் ரயிலில் இருந்து தள்ளிக் கொன்ற மகனின் மனநிலை, நுகர்வு வெறி மனித மாண்பையே சிதைத்தெறிந்த அறவீழ்ச்சியின் உச்சத்தைக் காட்டுகிறது.