

திருவண்ணாமலை மகிழம் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்த மாணவர்களுக்கான மூன்று நாள் மொழிபெயர்ப்புப் பயிலரங்கில் இரண்டு அமர்வு களை நடத்தும் வாய்ப்பை நண்பர்கள் அளித்தார்கள்.
அந்த நிகழ்வில் பங்கேற்கும் சக பயிற்சியாளர்கள் அசதா, கமலாலயன் ஆகியோர் அடுத்த சில நாள்களில் மொழிபெயர்ப்புக்காக ‘அருட்செல்வர் நா. மகாலிங்கம் பரிசு' பெற இருக்கிறார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்கள் மொழிபெயர்ப்பில் நெடுந்தொலைவு செல்ல வாழ்த்துக்கள்.
மொழிபெயர்ப்பு பல கிளைகளைக் கொண்ட ஆலமரம். அதில் இலக்கிய மொழிபெயர்ப்பு ஒரு கிளை எனில் செய்தி ஊடகத்துறை மொழிபெயர்ப்பு இன்னொரு கிளை. நாம் படிக்கும், கேட்கும், பார்க்கும் செய்திகளில் குறைந்தது சரிபாதி அளவு செய்திகள் ஒரு முறையோ இரு முறையோ மொழிபெயர்க்கப்பட்டவை. உலகைப் பற்றிய நமது புரிதலில் பெரும் பகுதி செய்தி ஊடகத்துறை மொழிபெயர்ப்பின் வாயிலாகவே சாத்தியமாகிறது.
இலக்கிய மொழிபெயர்ப்பு, நூல்கள் மொழிபெயர்ப்பு நீண்ட, பெரிய முயற்சிகளை, சிற்பியின் நுட்பத்தைக் கோருகிறவை. ஒப்பீட்டளவில் குறைவாக ஊதியம் தருகிறவை. எனவே, அவற்றில் சிறந்த பணிகள் அங்கீகாரமும் கவனமும் பெறுவது நல்லது.
ஆனால், செய்தி ஊடகத்துறை மொழிபெயர்ப்பு அங்கீகாரம் சிறிதுமற்ற வேலையாகத் தொடர்வது நல்லதல்ல. மொழி பெயர்த்தவர் பெயர்கூட ஊடகங்களில் வராதபோது அங்கீகாரம் என்பதெல்லாம் தொலைதூரக் கனவு.
15 மொழிகளில் ஊரக வாழ்வாதார செய்திகளை வழங்கும் ‘பாரி' (PARI) போன்ற தளங்கள் மொழிபெயர்ப்பாளர்களை முறையாக அடையாளப்படுத்துகின்றன.
மைய நீரோட்ட ஊடகங்கள் இதில் மனம் வைக்க வேண்டும். இது நாள்வரை செய்தி மொழிபெயர்ப்பில் செம்மை பேணுவோர், அதை தங்கள் சொந்த மனக் கிளர்ச்சிக்கா கவே செய்துவருகின்றனர். ஆனால், பரவலாக தரம் கீழே வீழ்ந்துகொண்டிருக்கிறது. அங்கீகாரம் அற்ற வேலையில் இது நடப்பது இயற்கை.
- அ.தா.பாலசுப்ரமணியன், பத்திரிகையாளர் (ஃபேஸ்புக் பதிவு)