

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களைப் பெரிதும் பாதித்துவரும் மிகத் தீவிரமான பிரச்சினைகளில் போதைப் பொருள் முக்கியமானது. வலுவான சட்டங்களை மீறி போதைப் பொருள் புழக்கம் நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது. போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் குற்ற வலைபின்னல்கள் வலுவடைந்துகொண்டே வருகின்றன. போதைப் பொருள்களற்ற சமூகத்தை உருவாக்குவதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்துவருகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 26, போதைப் பழக்கம் - சட்டவிரோதக் கடத்தலுக்கு எதிரான சர்வதேச நாளாக (போதைப் பொருளுக்கு எதிரான சர்வதேச நாள்) அனுசரிக்கப்படும் என்று 1987 டிசம்பர் 7 அன்று ஐ.நா. பொது அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. போதைப் பொருள்களால் சமூகத்துக்கு ஏற்படக்கூடிய தீய விளைவுகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்கான பல்வேறு வகையான பிரச்சார நிகழ்ச்சிகள் ‘போதை ஒழிப்பு நாள்’ அன்று பல உலக நாடுகளில் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
போதைப் பொருள் பழக்கத்துக்கு ஆட்பட்டோர் சமூக விலக்கத்துக் கும் பாகுபாட்டுக்கும் ஆளாகின்றனர். இதன் காரணமாகப் போதைப் பழக்கத்திலிருந்து மீள விரும்புவோர் அதற்குத் தேவையான மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட உதவிகளை நாட முடிவதில்லை. எனவே, மனித உரிமைகள், சக மனிதன் மீதான அக்கறை ஆகியவற்றுடன் கூடிய மனிதர்களை மையப்படுத்தும் அணுகுமுறையுடன் போதை ஒழிப்புக் கொள்கைகளை வகுக்க வேண்டியதன் அவசியத்தை ஐ.நா. உணர்ந்துள்ளது. இந்தப் பின்னணியில் 2023ஆம் ஆண்டுக்கான ‘சர்வதேச போதை ஒழிப்பு நாள்’ கருப்பொருள் - ‘மனிதர்களுக்கு முதன்மை: களங்கம் சுமத்துவதையும் பாகுபாட்டையும் நிறுத்துவோம், தடுப்பு நடவடிக்கைகளுக்கு வலுவூட்டுவோம்’ (People First: stop stigma and discrimination, strengthen prevention) என்பதாகும்.