

உயிரினங்களின் அன்றாட வாழ்க்கையில் பெருங்கடல்கள் ஆற்றும் முக்கியப் பங்கினை அனைவருக்கும் நினைவுபடுத்துவதற்கும் மனிதர்கள் பெருங்கடல்களைப் பாதுகாக்கக்கூடிய வழிகள் குறித்த விழுப்புணர்வை அதிகரிப்பதற்கும் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 8 அன்று ‘உலகப் பெருங்கடல் நாள்’ அனுசரிக்கப்படுகிறது. 1992இல் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் சுற்றுச்சூழல் - வளர்ச்சிக்கான ஐ.நா. (UNCED) மாநாடு நடைபெற்றது. இது புவி உச்சி மாநாடு என்றும் அழைக்கப்படுகிறது.
அம்மாநாட்டின் பகுதியாகச் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த தமது கருத்துகளை முன்வைக்கச் சுற்றுச்சூழல் சார்ந்து பணியாற்றிவந்த அரசுசாரா அமைப்புகள், சிவில் சமூகத்தினருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அதில் கனடா அரசின் ஆதரவுடன் கனேடியப் பெருங்கடல் மையம் (Oceans Institute of Canada) என்னும் அமைப்பின் நிர்வாக இயக்குநரும் கடல்சார் சட்டங்கள் துறையில் சர்வதேச ஆளுமையுமான ஜூடித் ஸ்வான் ஜூன் 8 அன்று உலகப் பெருங்கடல் நாளாக அனுசரிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை முன்மொழிந்தார்.
அதற்குப் பிறகு பல நாடுகளில் ஜூன் 8 பெருங்கடல்கள் நாளாக அனுசரிக்கப்பட்டுவந்தது. 2002இல் முதல் முறையாக உலக அளவில் பெருங்கடல் நாள் கொண்டாடப்பட்டது. 2008இல் ஜூன் 8ஐ உலகப் பெருங்கடல் நாளாக ஐ.நா. அங்கீகரித்தது. 2009 ஜூன் 8இலிருந்து ஒவ்வோர் ஆண்டும் இந்நாளுக்கான நிகழ்வுகளை ஐ.நா.வும் ஒருங்கிணைத்துவருகிறது. 2023க்கான கருப்பொருள் ‘பெருங்கடல் கோள்: மாறும் அலைகள்’ (Planet Ocean: Tides are changing) என்பதாகும்.
புவியின் 70% பெருங்கடல் களால் நிரம்பியுள்ளது. பெருங் கடல்கள் இல்லாமல் மனிதர்கள் உள்பட எந்த உயிரினமும் இந்தப் புவியில் வாழ முடியாது. எனவே, பெருங்கடல்களை நாம் முதன்மைப்படுத்த வேண்டும் என்பதே இதன் சாராம்சம்.