Published : 01 Mar 2023 04:28 PM
Last Updated : 01 Mar 2023 04:28 PM

வியாழனும் வெள்ளியும் வானில் இணையும் அற்புத நிகழ்வு

பா. ஸ்ரீ குமார், அறிவியல் பலகை

ஓர் இணைப்பு என்பது இரண்டு கோள்கள் அல்லது ஒரு கோளும் நிலவும் அல்லது ஒரு கோளும் நட்சத்திரமும் பூமியின் இரவு வானில் நெருக்கமாகத் தோன்றும் ஒரு நிகழ்வு. சூரியனைச் சுற்றி நீள் வட்டப் பாதையில் அனைத்து கோள்களும் சுற்றி வருகின்றன. அப்படிச் சுற்றி வரும்போது ஒரு சில கோள்கள் மிக அருகே அருகே வருவது போல நமக்குத் தோன்றும். இது சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களுக்கு இடையே அடிக்கடி நிகழும் ஒன்று. வியாழன், வெள்ளி ஆகிய கோள்களின் இணைவு இன்று நிகழ உள்ளது. இது ஒரு மாயத் தோற்றம் மட்டுமே. உண்மையில் இரு கோள்களுக்கு இடையிலான தூரம் பல கோடி கிலோமீட்டர்களாக இருக்கும் என்பதை மறக்க வேண்டாம்.

இன்றிரவு (மார்ச் 1) பூமியிலிருந்து வானைப் பார்க்கும்போது, அருகருகே இருப்பதைப் போல வியாழன், வெள்ளி ஆகிய கோள்கள் தெரியும். உண்மையில் இவை அருகருகே இருப்பதில்லை; அவற்றுக்கிடையே சுமார் 67 கோடி கிலோமீட்டர் இடைவெளி உண்டு. ஆனால், இன்று அந்த இடைவெளி குறைந்து காணப்படும். இன்றிரவில் சுமார் 41 கோடி கிலோமீட்டர் இடைவெளியில் இருக்கும் அந்த இரு கோள்களும் பூமியிலிருந்து பார்க்கும் பொழுது ஒன்றை ஒன்று தழுவி இருப்பது போல் தெரியும். இந்த நிகழ்வில் நிலவும் கை கோர்க்க உள்ளது.

வெள்ளிக் கோள்

சூரியக் குடும்பத்தின் இரண்டாவதாக இருப்பது வெள்ளிக்கோள். அது 224.7 (புவி நாள்களில்) நாள்களுக்கு ஒரு முறை சூரியனைச் சுற்றி வருகிறது. இக்கோளுக்கு இயற்கையான துணைக்கோள் ஏதுமில்லை. இந்த கோள் வலமிருந்து இடமாக (clock wise) சுற்றி வருகிறது. இதனால், வெள்ளியில் சூரியன் மேற்கு திசையில் உதித்து கிழக்கு திசையில் மறையும். வெள்ளிக் கோள் சூரியனிலிருந்து சுமார் 10 கோடி கிலோ மீட்டர் தொலைவிலும், பூமியிலிருந்து சுமார் 25 கோடி கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.

வியாழன் கோள்

சூரியக் குடும்பத்தின் கோள்களில் வியாழனே மிகப்பெரியது. அது பூமியை விட ஆயிரம் மடங்கு பெரியது; அதாவது, ஆயிரம் பூமிகளை வியாழன் கோளுக்குள் அடைத்து விடலாம். வியாழன் கோள் சூரியனிலிருந்து சுமார் 82 கோடி கிலோ மீட்டர் தொலைவிலும், பூமியிலிருந்து சுமார் 60 கோடி கி.மீ தூரத்தில் உள்ளது.

முக்கோண வடிவம்

பிப்ரவரி மாத தொடக்கத்தில், இந்த வியாழன், வெள்ளி ஆகிய இரு கோள்களும் 29 டிகிரியால் பிரிக்கப்பட்டன; இப்போது அவை மெதுவாக ஒன்றுக்கு ஒன்று நெருங்கி வருகின்றன. இவற்றோடு சந்திரனும் ஒரே நேர்க்கோட்டில் இணைந்து இன்று மாலை சூரியன் மறைந்த பிறகு தெரியும்.

பிப்ரவரி 20 ஆம் தேதி இரண்டு கோள்களுக்கும் இடையிலான தூரம் ஒன்பது டிகிரிக்குச் சற்று அதிகமாக இருந்தது. பிப்ரவரி 27 இடைவெளி2.3 டிகிரியாகக் குறைந்தது. மார்ச் 1, புதன்கிழமை மாலை, 0.52 டிகிரி இடைவெளியில் இரு கோள்களும் மிக அருகில் இருக்கும். இந்த இரண்டுக்கும் இடையில் சந்திரன் இருக்கும். மூன்றும் ஒன்று சேர்ந்து ஒரு முக்கோண வடிவத்தை வானில் பிரதிபலிக்கும்.

காணத் தவறாதீர்கள்

சூரியன் மேற்கு வானில் மறைந்த பின், சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, மேற்கு-தென்மேற்கு அடிவானத்தை நோக்கித் தாழ்வாக உற்று நோக்குங்கள். வளர்ந்து வரும் பிறை நிலவின் மெல்லிய துணுக்குகளைக் காணலாம். அதோடு மட்டுமல்லாமல் இன்று வானம் தெளிவாக இருந்தால், வியாழனைச் சுற்றியுள்ள பட்டைகளைக் கூட நாம் காண முடியும். உங்கள் வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று இந்த அரிய வானியல் நிகழ்வைக் காணத் தவறாதீர்கள். மார்ச் 1 முதல் சில நாட்களுக்கு இந்த அற்புத காட்சியை மாலை வேலைகளில் நாம் காண முடியும்.

கட்டுரையாளர், அறிவியல் பலகை மாநில ஒருங்கிணைப்பாளர்
தொடர்புக்கு: srikumarariviyalpalagai@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x