சார்லஸ் டார்வின் 140ஆவது நினைவு நாள் - உலகைப் புரட்டிப்போட்ட எழுத்தும் வாசிப்பும்

சார்லஸ் டார்வின் 140ஆவது நினைவு நாள் - உலகைப் புரட்டிப்போட்ட எழுத்தும் வாசிப்பும்
Updated on
3 min read

19-ம் நூற்றாண்டு வரைக்கும் மனுஷன் எப்படித் தோன்றியிருப்பான் என்கிற கேள்வி பல விஞ்ஞானிகளுக்கு எழுந்தாலும், அதற்குத் துல்லியமான பதில் கிடைக்கவில்லை. 19-ம் நூற்றாண்டில் பிரிட்டனில் உள்ள ஷ்ரூஸ்பரி இடத்தில் பிறந்த சார்லஸ் டார்வின் அதற்குத் திட்டவட்டமான பதிலைக் கண்டுபிடித்தார்.

குரங்குகளின் வாரிசு - மனிதர்கள், குரங்கு இனத்தின் வாரிசுகள். வாலில்லா குரங்குக்கும் நமக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது என்று அவர் கூறினார். இதை அவர் எப்படிக் கண்டுபிடித்தார்? அது ஒரு சுவாரசியமான கதை. அதிலும் குறிப்பாக அவர் இளைஞனாக இருந்தபோது, பீகிள் கப்பலில் ஐந்து வருஷம் உலகத்தைச் சுற்றினார். அப்போது கிடைத்த அனுபவ அறிவு, அறிவியல் அறிவுதான் அவருடைய கண்டுபிடிப்புகளுக்கு ஆதாரம்.

தொடங்கியது பயணம்

ஆரம்பத்தில் டார்வினின் அப்பா, டார்வினை டாக்டருக்குப் படிக்க அனுப்பினார். ஆனால், டார்வினுக்கு அது பிடிக்கவில்லை, இயற்கையை ஆராய்ச்சி செய்வதில்தான் அவருக்கு ஆர்வம் இருந்தது. அதனால் டாக்டர் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டார். டார்வின் மேல் அக்கறையாக இருந்த கேம்ப்ரிட்ஜ் தாவரவியல் பேராசிரியர் ஹென்ல்ஸோ, 1831-ல் டார்வினுக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.

அதுல ‘பீகிள்கிற கப்பல்ல, இயற்கை ஆராய்ச்சியாளரா போறதுக்குத் தயாரா?’ என்று அவர் கேட்டிருந்தார். ஆனால், அந்தக் கப்பலில் ஆராய்ச்சியாளராகச் செல்வதற்கு எந்தச் சம்பளமும் கிடையாது. டார்வினின் அப்பா, கப்பலில் செல்வதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. டார்வினின் மாமா ஜோசியா வெட்ஜ்வுட்தான், பீகிள் கப்பலில் போறதுக்கு டார்வினின் அப்பாவைச் சம்மதிக்க வைத்தார்.

இந்தப் பயணத்தில் தனக்குக் கிடைத்த அனைத்து உயிரினங்களையும் டார்வின் ஆராய்ந்தார். அவற்றைப் பற்றிய வர்ணனையை எழுதியும் வைத்தார். ஆரம்பத்தில் பறவைகளையும் உயிரினங்களையும் சுட்டுப் பிடிப்பதில் ஆர்வம் காட்டிய டார்வின், பின்னர் ஒவ்வொரு நிலப்பகுதியையும் உற்றுநோக்குவதிலும் அப்பகுதி ஏன் அப்படி இருக்கிறது என்பதற்கான காரண, காரியத்தைத் தேடுவதிலும் செலவிட்டார்.

இது அவருடைய அறிவை வளர்த்தது. ஒவ்வொரு பகுதியிலும் கப்பல், குதிரை, நடை என்று வாய்ப்பு கிடைத்த வழிகளில் எல்லாம் பயணம் செய்து இயற்கையை உற்றுநோக்கினார்.

வாசிப்பும் எழுத்தும்

இயற்கை அறிவியல் தொடர்பாக நிறைய வாசித்தார். அது மட்டுமில்லாமல், அவர் செய்த இன்னொரு முக்கியமான விஷயம் தினசரி தனது டைரியை எழுதியதுதான். பார்த்த அனைத்து விஷயங்களையும் தவற விட்டுவிடாமலும், விரிவாகவும் எழுதி வைத்தார்.

அவருடைய எழுத்தும் வாசிப்பும் புதிய புரிதல்களை ஏற்படுத்தின. லயல் என்பவரின் புவியியல் பற்றிய புத்தகம், மால்தூஸின் மக்கள்தொகை கொள்கை போன்றவற்றைப் படித்ததால்தான், பரிணாமவியல் கொள்கையை டார்வினால் உருவாக்க முடிந்தது.

கலாபகஸ் தீவுகளில் உள்ள உயிரினங்களின் வெவ்வேறு வகைகள், குறிப்பாக உண்ணும் உணவுக்கு ஏற்ப கூம்பலகன் பறவைகளின் அலகில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இயற்கைத் தேர்வு (Natural selection), உயிரினங்களின் தகவமைப்பு (Adaptation), பரிணாமவியல் கொள்கை (Evolution theory) ஆகியவற்றை டார்வின் உருவாக்கினார்.

முன்னணி அறிவியலாளர்

கப்பலில் பயணம் மேற்கொண்டபோதே தன் பேராசிரியர் ஹென்ஸ்லோவுக்கு அவர் எழுதிய கடிதங்கள், கேம்பிரிட்ஜ் தத்துவச் சிந்தனையாளர்கள் பேரவையில் விநியோகிக்கப்பட்டன. டார்வினுடைய கட்டுரை, டார்வின் சேகரித்த எலும்புகள் மீது பண்டையவியல் ஆராய்ச்சியாளர்கள் காட்டிய ஆர்வம் ஆகியவற்றின் காரணமாக முன்னணி அறிவியலாளர்கள் மத்தியில் டார்வினுக்கான இடம் அப்போதே உறுதிசெய்யப்பட்டது.

ஐந்து ஆண்டு பீகிள் கடற்பயணத்தை முடித்துக்கொண்டு டார்வின் நாடு திரும்பினபோது, தீவிர கள ஆராய்ச்சிக் குறிப்புகளைக் கொண்ட ஒரு விஞ்ஞானியாக அவர் மாறியிருந்தார். தன்னுடைய கடற்பயணம் குறித்து அவர் எழுதிய ‘பீகிள் கடற்பயணம்’ என்ற அவருடைய முதல் புத்தகம் உலகப் புகழ்பெற்றது.

பரிணாமவியலின் தந்தை

இளைஞராக இருந்தாலும் அறிவியலாளர்கள் மத்தியில், தான் மதிக்கப்பட வேண்டும் என்று டார்வின் நினைத்தார். தான் எடுத்துக்கொண்ட காரியத்தில் ஆர்வத்துடன் தீவிரமாக உழைத்து, தன் உடலை வருத்திக்கொண்டு வேலை பார்த்தார். தனது கண்டறிதல், கொள்கைகளை ஆதாரப்பூர்வமாக முன்வைத்தார்.

‘பரிணாமவியலின் தந்தை’ என்று இன்றைக்கு அவர் போற்றப்படுகிறார். ஆனால், பரிணாமவியல் கொள்கையை முதன்முதலாக அவர் சொன்னபோது, எப்படியெல்லாம் அவருக்கு எதிர்ப்பு வந்தது தெரியுமா? அவர் சொன்னதை விஞ்ஞானிகள் சிலர் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், பழமையில் ஊறிய பல மத நம்பிக்கையாளர்கள் டார்வினை எதிரியாகப் பார்த்தார்கள். அவரைத் தூற்றினார்கள். அவரைக் குரங்காகவே வரைந்து, அவமானப்படுத்த நினைத்தார்கள்.

ஆனால், டார்வின் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. தன்னுடைய கொள்கைக்கு ஆதாரம் இருக்கும்போது, இதையெல்லாம் கண்டு உணர்ச்சிவசப்பட்டுக் கருத்துச் சொல்லக் கூடாது என்று அவர் விட்டுவிட்டார். அன்றிலிருந்து இன்றுவரை டார்வினுடைய பரிணாமவியல் கொள்கையைத்தான் உலகம் முழுவதும் உள்ள குழந்தைங்க, ஆராய்ச்சியாளர்கள் படிக்கிறாங்க.

அன்றைக்கு எதிர்ப்பைப் பார்த்து அவர் பேசாமல் ஒதுங்கியிருந்தால், அவருக்குப் பின்னாடி இன்றைக்கு உலகம் கண்டுபிடித்திருக்கிற பல அரிய விஷயங்கள் நமக்குக் கிடைக்காமலே போயிருக்கும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in