

சிவபெருமானின் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களில் 37-வது தலமாக திருக்கோடிக்காவல் திருக்கோடீஸ்வரர் கோயில் விளங்குகிறது. ஈசன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கும் இத்தலம், 1,008 ஈஸ்வரர்களால் சூழப்பட்டுள்ளது.
மூன்று கோடி (திரிகோடி) தேவர்களும் இத்தல ஈசனை பூஜை செய்துள்ளதால், ஈசன் கோடீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இத்தலம் திருக்கோடிக்கா என்று அழைக்கப்படுகிறது. கிருத யுகத்தில் 12,000 ரிஷிகளும் (வாலகில்ய, வைகானஸ முனிவர்கள்), மூன்று கோடி மந்திர தேவதைகள் ஞானமுக்தி (சாயுஜ்யம்) அடையும் பொருட்டு, வேங்கடகிரியில் மந்திரங்களை சொல்லிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த துர்வாச முனிவர், அவர்களின் செயல் கண்டு சிரித்தார். குருவுக்கு பணிவிடை செய்து அவரது ஆசியுடன் அத்யாத்ம வித்யையைப் பயின்று, பிரம்ம ஞானம் பெற்றதும், பரமேஸ்வரனின் அனுக்கிரஹத்துடன் மட்டுமே ஞானமுக்தி பெற முடியும். தவத்தாலோ மந்திர சக்தியாலோ சாயுஜ்ய முக்தியைப் பெற முடியாது என்றார்.
இதைக் கேட்ட மந்திர தேவதைகள் கோபமடைந்தனர். துர்வாசரைப் பழித்தனர். வேங்கடவனை நோக்கி தவம் இருந்து இக்கணமே நாங்கள் முக்தி அடைவோம் என்றனர். இது நடக்காது என்று துர்வாசர் சபித்தார். துர்வாசரின் கோபத்தைப் பொருட்படுத்தாத மந்திர தேவதைகள், அங்கேயே தங்கி மன் நாராயணனை நோக்கி தவம் இருந்தனர்.
ஆனால், 12,000 ரிஷிகளும், துர்வாசரின் அறிவுரையை ஏற்று, அவருடன் காசிக்குச் சென்று சிவதரிசனம் செய்தனர். துர்வாசரின் கனவில் தோன்றிய திருக்கோடீஸ்வரர், மகரிஷிகளுக்கு பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசித்து, அத்யாத்ம வித்தையைக் கற்றுத் தருமாறு பணித்தார். ஒருமாத காலம் காசியில் தங்கிவிட்டு திருக்கோடிக்கா வருமாறு கூறினார்.
அவ்வாறே துர்வாசரும் திருக்கோடிக்கா வந்தடைந்தார். மகரிஷிகள் சிருங்கோத்பவ தீர்த்தத்தில் நீராடியதும், திருக்கோடீஸ்வரர், திரிபுரசுந்தரி அம்பாள், கணபதி, சுப்பிரமணியருடன் திவ்ய தரிசனம் அளித்தார். ஈசன் முன்னிலையில் துர்வாசர், சிருங்கோத்பவ தீர்த்தத்தை 12,000 ரிஷிகள் மீது தெளித்தார். அப்போது ஒரு ஜோதி தோன்றி, முனிவர்கள் அதில் ஐக்கியமாகினர் (ஞானமுக்தி).