

நாதன்கோவில் ஜெகநாதப் பெருமாள் கோயில் (நந்திபுர விண்ணகரம்) திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 21-வது திவ்ய தேசம் ஆகும். இக்கோயிலின் மூலஸ்தான கோபுரத்தில் நந்திதேவரும் நான்முகனும் திருமாலை வணங்கிய நிலையில் உள்ளனர்.
திருப்பாற்கடலில் திருமகள் எப்போதும் திருமாலின் பாதத்தருகே இருந்து சேவை சாதிப்பது வழக்கம். அவளுக்கு ஒருநாள் திருமாலின் திருமார்பில் இடம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் உதித்தது.
அந்த விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள வேண்டி செண்பகாரண்யம் (செண்பக மரங்கள் நிறைந்த வனம்) என்ற இத்தலத்துக்கு வந்து கிழக்கு நோக்கி தவம் புரிந்தாள். திருமகளின் பிரிவை திருமாலால் தாங்க முடியவில்லை.
ஓர் ஐப்பசி மாதம் வளர்பிறையில் வெள்ளிக்கிழமை அன்று திருமகளை தன் மார்பில் ஏற்றுக் கொண்டார் திருமால். அதன் காரணமாக வெள்ளிக்கிழமைகளில் இத்தலத்தில் தாயாருக்கு செய்யப்படும் திருமஞ்சனம், ஆராதனைகள் பக்தர்களின் வேண்டுதலை விரைவில் நிறைவேற்றும் என்பது நம்பிக்கை.