

இரணியூர் தலத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் ஆட்கொண்டநாதர், தொழிலில் வெற்றி அருளும் ஈசனாக போற்றப்படுகிறார். பிரகாரத்தில் முருகன், வள்ளி, தெய்வானை அனைவரும் மயில் வாகனத்தில் அருள்பாலிப்பது தனிச்சிறப்பு.
தல வரலாறு: திருமால், நரசிம்ம அவதாரம் எடுத்து அசுரனான இரண்யனை சம்ஹாரம் செய்தார். இதனால் அவருக்கு தோஷம் ஏற்பட்டது. தோஷம் நீங்க சிவனை வழிபட்டார். சிவன், திருமாலுக்கு காட்சி அருளி தோஷம் நீக்கினார். திருமாலின் வேண்டுதலுக்காக சிவன், இத்தலத்தில் ‘ஆட்கொண்ட நாதர்’ என்ற பெயரில் எழுந்தருளினார். நரசிம்மருக்கு விமோசனம் தந்தவர் என்பதால் இவருக்கு, ‘நரசிம்மேஸ் வரர்’ என்றும் பெயருண்டு.
கோயில் சிறப்பு: சுயம்பு மூர்த்தியாக ஆட்கொண்ட நாதர் அருள்பாலிக்கிறார். கோயில்களில் அமைக்கப்பட்டிருக்கும் கோபுரம், விமானம் சுவாமியின் அம்சமாக இருப்பதாக ஐதீகம். நடை அடைக்கப்பட்டிருக்கும் வேளையில் விமானத்தையே சுவாமியாக கருதி வழிபடும் வழக்கம் உள்ளது. இக்கோயில் முன்மண்டபத்தில் இருந்து ஒரே சமயத்தில் சுவாமியையும், விமானத்தையும் தரிசிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அதிக எண்ணிக்கையில் சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம் நடைபெறுகிறது.