

காஞ்சிபுரம் மாவட்டம், எழுச்சூர் நல்லிணக்கேஸ்வரர் கோயில், குடும்ப ஒற்றுமை அருளும் தலமாகப் போற்றப்படுகிறது. பெரு ஆவுடையார், இரண்டரை அடி உயர லிங்கமுடன் மூலவர் கிழக்கு நோக்கி அருள்பாலிப்பது தனிச்சிறப்பு.
எழுச்சூர் நல்லிணக்கேஸ்வரர் கோயில் 1,200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. 2 ஏக்கர் நிலப்பரப்பில் கோயில் அமைந்துள்ளது. மன்னர்களின் மானியங்கள், மகான்களின் அருளாசி, விக்கிரகங்கள், கோயிலில் உள்ள கலை நுணுக்க வேலைப்பாடுகள் என்று இக்கோயில் பல சிறப்புகளைக் கொண்டுள்ளதாக உள்ளது.
மகா மண்டபத்தின் வலதுபுறம் தெற்கு திசை நோக்கி நின்ற கோலத்தில் தெய்வநாயகி அம்பாள் தனிசந்நிதியில் அருள்பாலிக்கிறார். அம்பாள் விக்கிரகத்தின் கால் விரல்கள், நகங்கள், சேலை மடிப்புகள் ஆகியன தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன. திருமண வரம் பெற, குழந்தை பாக்கியம் கிடைக்க, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.