

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி சங்க மேஸ்வரர் கோயிலில் ஈசன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். வேணுகோபாலர் சந்நிதிக்கு பின்புறத்தில் பசு ஒன்று ஒரே உடல், இரண்டு தலைகளுடன் காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது. தேவார பாடல் பெற்ற 274 சிவன் கோயில்களில் இது 207-வது தேவாரத் தலம் ஆகும்.
வடக்கு திசைக்கு அதிபதி குபேரன். அவனுக்கு பூலோகத்தில் உள்ள புனித தலங்களை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. அதன் காரணமாக ஒவ்வொரு தலமாகச் சென்று அங்குள்ள மூர்த்திகளை தரிசித்து வந்தான். அதுபோல் யாத்திரை செல்லும்போது பவானி தலத்துக்கு வந்தான்.
இத்தலத்தில் முனிவர்கள், ஞானிகள் உள்ளிட்டோர் தவம் செய்வதைக் கண்டான். அத்துடன் அனைத்து உயிரினங்களும் ஒற்றுமையாக இருப்பதைக் கண்டான். தவம் செய்பவர்களுக்கு எவ்வித இன்னல்களையும் அவை கொடுக்காததைக் கண்டு வியந்தான்.
இத்தலத்தில் தெய்வீக சக்தி இருப்பதை அறிந்து அவனும் இறை தரிசனம் பெற வேண்டி தவம் புரிந்தான். அவனது தவத்தைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமானும் திருமாலும் அவன் முன்னர் தோன்றி அவனுக்கு அருள்பாலித்தனர். மேலும் சிவபெருமான் அங்கிருந்த இலந்தை மரத்தின் கீழ் சுயம்புவாகத் தோன்றி அருள்பாலித்தார். அப்போது ஏதாவது வரம் கேட்கச் சொல்லி ஓர் அசரிரி கேட்டது.