

திருச்சி மாவட்டம் அன்பில் சுந்தர்ராஜப் பெருமாள் கோயில், திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 5-வது திவ்ய தேசம் ஆகும். பாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தில் இருப்பதைப் போல இங்கும் திருமால் தாரக விமானத்தின் கீழ் உள்ளார்.
ஒருசமயம் நான்முகனுக்கு உலகில் தானே மிகவும் உயர்ந்தவர் என்ற எண்ணம் மேலிட்டது. மேலும் தான் மட்டுமே உலகில் உயிர்களைப் படைக்கிறோம் என்றும் அவை அழகாக இருப்பதற்குக் காரணம் தான்மட்டுமே என்ற ஆணவமும் வலுப்பெற்றது.
இருப்பினும் தன்னை யாரும் வணங்குவதில்லையே என்ற ஆதங்கமும் எழுந்தது.நான்முகனின் இந்த எண்ண ஓட்டத்தை உணர்ந்த திருமால், இதுகுறித்து நான்முகனை எச்சரித்தார். இதற்கெல்லாம் செவி சாய்க்காதவராக இருந்தார் நான்முகன்.
திருமால், நான்முகனைத் திருத்தும் நோக்கில், பூலோகத்தில் ஒருசாதாரண மானிடப் பிறவி எடுக்குமாறு அவரை சபித்துவிட்டார். பூலோகத்தில் அனைத்து தலங்களுக்கும் சென்று தன்னுடைய தவறுக்கு மன்னிப்பு கோரி வந்தார் நான்முகன். இவ்வாறு ஒவ்வொரு தலமாகச் சென்று வரும்போது ஒருநாள் இத்தலத்துக்கு வந்தார்.