

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கர நாராயணர் கோயிலில் ஈசனும் பெருமாளும் ஒன்றாக அருள்பாலிக்கின்றனர். சந்நிதியில் ஸ்படிக லிங்கமாக அருள்பாலிக்கும் சந்திரமவுலஸ்வரருக்கு அபிஷேகம் உண்டு. சங்கர நாராயணருக்கு அபிஷேகம் கிடையாது.
சங்கன் என்ற நாக அரசன், ஈசன்மீது தீராத பக்தி கொண்டிருந்தான். அதேபோல் பதுமன் என்ற மற்றொரு நாக அரசன் திருமால் மீது தீராத பக்தி கொண்டிருந்தான். இருவருக்கும் சிவன், திருமால் இருவரில் யார் பெரியவர் என்ற விவாதம் எப்போதும் எழும்.
ஒருமுறை விவாதம் முடிவுறாத நிலையில் இருக்கும்போது, சங்கன், பதுமன் இருவரும், பார்வதியிடம் முறையிட்டு, தங்கள் விவாதத்துக்கு சரியான தீர்ப்பு வழங்குமாறு வேண்டினர்.
ஈசன், திருமால் இருவருமே சமசக்தி கொண்டவர்கள் என்பதை அவர்களுக்கு (சங்கன், பதுமன்) தெரிவிக்க, ஈசனும் திருமாலும் இணைந்து காட்சி அளிக்க வேண்டும் என்று தவம் இருந்தாள்.
பார்வதியின் தவத்தை மெச்சி, ஈசனும் திருமாலும் இணைந்து சங்கர நாராயணராக தோன்றி அருள்பாலித்தனர். பின்னர் அம்பாளின் வேண்டுகோளுக்கு இணங்க சங்கரலிங்கமாக எழுந்தருளினார் சிவன். அன்று முதல் சங்கரலிங்கத்தை இரு நாக அரசர்களும் வழிபட்டு வந்தனர்.