

திருவருட் பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் சத்திய ஞான சபையை நிறுவி, அதன் மூலம் கடவுள் ஒருவரே என்ற கருத்தை வலியுறுத்தி வந்தவர். ‘வாடியபயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று பாடி மனிதநேயம் தழைத்தோங்கச் செய்தவர்.
ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் சித்திரை நட்சத்திர தினம் (வள்ளலாரின் அவதாரத் திருநாள்) உலக ஒருமைப்பாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. அதேபோல் ஒவ்வொரு தைப்பூச பௌர்ணமி தினத்தில் ஜோதி தரிசனமும் நடைபெற்று வருகிறது.
அனைவரையும் நல்வழிப்படுத்தும் நோக்கில் அவரது பொன்மொழிகள் அமைந்துள்ளன. கடவுள் ஒருவரே. அவர் அருள்ஜோதி வடிவாக உள்ளார். கடவுள் எங்கும் நிறைந்துள்ளார். அவர் அருள் தன்மையாகவும், ஜோதி மயமாகவும் உள்ளார். அவரே நம்மில் சிரநடு சிற்றம்பலத்தை (தலைநடு) சிறு அணு ஒளி ஜோதியாக உள்ளார்.
ஜீவ தேகங்களே கடவுளது ஆலயங்கள். கடவுளே அவரவர் சிரநடு அணு ஒளியாக இருந்து மரணம் இல்லா பெருவாழ்வை பெற உலக மக்களை பக்குவப்படுத்திக் கொண்டுள்ளார். எல்லா உயிர்களுக்கும் இன்பம் தருவதற்கு அகத்தும் புறத்தும் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி உண்மைக் கடவுள் ஒருவரே உள்ளார். அவர் அருள் தன்மையாகவும், ஜோதி வடிவாகவும் உள்ளார்.
எல்லா உயிர்களிடத்தும் கடவுள் இருப்பதை அறிதலே உண்மையான பக்தியாகும். தயவு தான் இறைவன், தயவு தான் மனிதன், தயவு தான் பிரபஞ்சம் ஆகிய உலகியல் வாழ்வு ஆகும். தய என்பது நம் சிரநடு சிற்றம் பலத்தே கடவுளும் நாமும் சேர்ந்த நிலை.