

பாரத நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இராமகதை உண்டென்பது கண்கூடு. எனினும், அந்தந்த வட்டாரத்தின் பழக்க வழக்கங்களுக்கும் தட்பவெப்ப நிலைகளுக்கும் ஏற்ப, சிற்சில கதை மற்றும் தத்துவார்த்த வேறுபாடுகளையும் காணலாம்.
துர்கா பூஜையும் சாக்த வழிபாடும் பரவலாகவும் பிரசித்தியாகவும் திகழும் வங்காள மரபில், இராமனும் துர்கா பூஜை செய்கிறான். இராமனுக்காக பிரம்மா செய்த தேவி பூஜை யைப் பற்றி காளிகா புராணம் குறிப்பிடும். 9-10-ம் நூற்றாண்டுகளில், காமரூபப் பகுதியில் தோன்றிய உபபுராணம் காளிகா புராணமாகும்.
அம்பிகையின் பெருமைகளை, குறிப்பாக காமாக்யா தேவியின் பெருமைகளை விவரிக்கும் இப்புராணத்தில், இராமனுக்கு அம்பிக்கை
எவ்வாறு உதவினாள் என்பதும் விளக்கப்படுகிறது.
ராமஸ்ய அனுக்ரஹார்த்தாய ராவணஸ்ய வதாய ச
ராத்ராவேவ மஹாதேவீ ப்ரஹ்மணா போதிதா புரா
அது தேவியின் இரவு நேரம்; அவள் உறங்கும் நேரம் (தட்சிணாயணம்). இருப்பினும், இராமனுக்கு அருள்பாலிக்கவும் இராவணனை அழிக்கவும் வேண்டி, பிரம்மதேவர், பூஜை இயற்றி, தேவியை விழிக்கச் செய்தார்.
ததஸ்து த்யக்தநித்ரா ஸா நந்தாயாம் ஆச்வினே ஸிதே
ஜகாம நகரீம் லங்காம் யத்ர ஆஸீத் ராகவ: புரா
தன்னுடைய உறக்கத்தை விட்டொழித்தவள், இராமன் இருந்த இலங்கை நகருக்கு, ஆச்வின (ஐப்பசி) மாதத்து சுக்ல முதல் நாளில் சென்றாள்.