

தெற்காசிய நாடுகள் பலவற்றிலும் இராம கதையின் வடிவங்கள் உண்டு. கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், பிலிப்பைன்ஸ், மியான்மர், தாய்லாந்து போன்ற நாடுகளில், தனிக் கதையாகவோ காவியமாகவோ, இராம வரலாற்றைக் காணக் கூடுகிறது.
வியட்நாம் நாட்டில் இவ்வாறாக, தனித்ததொரு காவியமாகவோ நாடகமாகவோ காணமுடியவில்லை என்றாலும், நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்பு ஒன்றில், சுவாரசியமான கதைக் கோப்பு கிட்டுகிறது.
‘லீன் னாம் சீ க்வாய்’ என்றொரு கதைத் தொகுப்பு: தெற்குச் சீன மற்றும் வடக்கு வியட்நாம் பகுதிகளை உள்ளடக்கிய லீன் னாம் வட்டாரத்தில் வழங்கப்பெற்ற வழக்காற்றுக் கதைகளைத் தொகுத்து எழுதியவர் 14-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ட்ரான் தே ஃபாப் என்னும் பெருமகனார்.
‘லீன் னாம் வட்டாரத்தின் விநோதமான வழக்காற்றுக் கதைகள்’ என்னும் பொருள்படியான இத்தொகுப்பில், ‘ஹோ தோன் தின்’ என்னும் அரசைப் பற்றிய கதை உள்ளது. சீன மொழியில் ஹுஸுன்ஸிங் என்றும் வழங்கப்பட்ட ஹோ தோன் அரசு, பண்டைய சம்ப நாடுகளில் ஒன்றாகும். இந்த நாட்டைப் பற்றிய குறிப்பை, யா ஸோவா என்பவர் குறித்த கதையில் காணலாம்.
ஹோ தோன் தின் என்னும் நாடு நல்ல முறையில் ஆளப்பட்டது. இதன் அரசர், பத்துரத அரசர் அல்லது தச ரதர் என்று அழைக்கப்பட்டார். இவருடைய பட்டத்து இளவரசர் வி தூ என்பவர்; வி தூ-வின் மனைவி பாக் தீன்; இந்தப் பெண், பேரழகி.