

இராமாயண காவியம் உலகின் அனைத்து இடங்களுக்கும் பயணித்துள்ளது. சீனா, கொரியா, ஆசிய பகுதிகள் என்று பயணித்த இராமாயணம், இராமபிரானின் புகழை உலகம் முழுவதும் பரவச் செய்தது. அதனால்தான் ஜப்பானில் இருந்தும் இராமன் புன்னகைக்கிறான்.
இராம காவியத்தைப் பாடும்படியாக வால்மீகி முனிவருக்கு பிரம்மா அறிவுறுத்துகிறார். இவ்வாறு அறிவுறுத்தும்போது, இராம கதையின் நிரந்தரப் பெருமையைப் பற்றியும் கூறுகிறார்.
யாவத் ஸ்தாஸ்யந்தி கிரய ஸ் ஸரித ஸ் ச மஹிதலே
தாவத் ராமாயண கதா லோகேஷுப்ரசரிஷ்யதி
மலைகளும் நதிகளும் பூமியில் இருக்கும் வரை, மக்கள் மனங்களில் இராம கதை நிலைக்கும். பிரம்ம வாக்கின் மெய்ம்மையை, உலக நாடுகள் பலவற்றிலும் காணப்படும் இராமகதைத் தகவல்கள் உறுதி செய்கின்றன. இடைக்கால ஜப்பானிய இலக்கியங்களில், முக்கியமான இரண்டு தொகுப்புகள், இராம கதைக் கூறுகளின் செறிவால் மிளிர்கின்றன.
ஒன்று, ஹொபுட்ஸுஷு. மற்றொன்று, சம்போ - எகடோபா. மினமொடோனோ டமனோரி என்பவரால் 10-ம் நூற்றாண்டில் தொகுக்கப் பெற்ற கதைக் களஞ்சியமான சம்போ - எகடோபா, ஓவியங்களின் தலைப்புக் கதைக் கோவையாக ஒருங்கிணைக்கப்பட்டது.
ஓவியச்சுருள்கள் சிதைந்து விட்டனவெனினும், கதைகள் நிலைத்துவிட்டன. இராமன், சீதை, அனுமன் பற்றிய தகவல்கள் இவற்றில் உண்டு. இதோ ஒரு கதை: கைரா என்னும் நாட்டில், செல்வச் செழிப்புமிக்க வணிகத் தம்பதி, முதுமையில் பார்வை மங்கிச் சுருங்கினர். வனத்துக்குச் சென்று புத்த தர்மத்தைக் கடைப்பிடிக்கும் ஆசையிருப்பினும், ஒரே மகனுக்காக வீட்டில் இருந்தனர்.