

இராம காதை என்பது இராமன் என்னும் தனி அரசனின் அல்லது தனி நபரின் கதை மட்டுமன்று. அறத்தின் பெருமையை, அறம் பிறழுங்கால் நேரும் சரிவை, அறம் காப்பதற்காக தெய்வம்கூடத் துன்பங்களை ஏற்றுக் கொள்ளத் தலைப்படும் பெருமிதத்தை உணர்த்தும் சீர்நெறியாகும்.
இராமனையும் இராமனை எதிர்த்து நின்ற இராவணனையும் கண்ணுறும் போது, மேரு மலைக்கு நிகரான திரிகூட மலையையும் அதன்மீது அமைக்கப்பெற்ற இலங்கை மாநகரையும் அரக்கன் எவ்வாறு பெற்றான் என்னும் ஐயம் தலைதூக்கும்.
இந்த ஐயத்துக்கான விடையைத் தருகிறது, கும்பகோணம் அனந்த பாரதி என்பார் இயற்றியுள்ள ‘உத்தர ராமாயண நாடகம்’ என்னும் இசைப்பாடல் திரட்டு. பொ.ஊ. ஆண்டு 1786 முதல் 1846 வரை வாழ்ந்தவரான இக்கவிஞர், கும்பகோணம் சாரங்கபாணி கோயில் சிங்கார மண்டபத்தில் இந்நூலை அரங்கேற்றியுள்ளார்.
அகத்தியருக்கும் இராமனுக்குமான உரையாடல்போல் அமைந்திருக்கும் இதனில், ‘அந்த இலங்கை தனில் அரக்கர் வந்த வழிகளென்ன?’ என்று இராமனே வினவுகிறான். அகத்தியர் விடை கூறுகிறார்.
விச்ரவா என்னும் முனிவர், பாரத்வாஜரின் மகளான தேவவர்ணி என்பாளை மணந்தார். இவர்களுக்குப் பிறந்த பிள்ளை, வைச்ரவணன் என்றழைக்கப்பட்டான். அறவாழ்க்கை வாழவேண்டும் என்னும் ஆசையால், குபேரன் என்னும் பெயர் பெற்றான். தான் உறைவதற்கு தக்க இடம் எது என்று தந்தையிடம் கேட்டான்.