

இராமாயண கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணாதிசயங்களைக் கொண்டு தனிச்சிறப்புடன் அமைக்கப்பட்டிருக்கும். இராமபிரான், சீதை, தசரதர், கோசலை பற்றி இராமாயணம் விரிவாக எடுத்துரைக்கும் சமயத்தில் கைகேயியின் சிறப்பும் அதில் விளக்கப்படுகிறது.
பாரத நாடகவியல் தந்தை என்னும் பாராட்டுக்கு உரியவர் பாஸர். இவர் வாழ்ந்த காலம் சரியாகத் தெரியவில்லையாயினும், கௌடில்யரின் (அர்த்த சாஸ்திரம்) காலத்துக்கும் பரதரின் (நாட்டிய சாஸ்திரம்) காலத்துக்கும் முந்தையவராக இவர் இருந்திருக்க வேண்டும்.
இவ்வகையில், பொது ஊழிக் காலத்துக்கு முந்தைய நான்காம் நூற்றாண்டுக் காலத்தவர் என்று எண்ணப்படுகிறார். 19-ம் நூற்றாண்டின் கடைப்பகுதியில், பாஸரின் நாடகங்கள் பல கண்டெடுக்கப்பட்டன.
பாலசரிதம், அபிஷேக நாடகம், பஞ்சராத்ரம், சாருதத்தம், தூதவாக்யம், அவிமாரகம், கர்ணபாரம், தூதகடோத்கசம், ப்ரதிக்ஞாயௌ கந்தராயணம், ஊருபங்கம், ஸ்வப்னவாசவதத்தம் என்பவற்றோடு, ப்ரதிம நாடகம் என்னும் நாடகமும் இவற்றுள் அடங்கும். இவற்றில் பலவும், சாக்கியர் கூத்துக் கலைஞர்களால், பற்பல காலமாகப் போற்றிப் பாதுகாக்கப்பட்டுள்ளன.
ப்ரதிம நாடகம், இராமனின் பெருமையை அடிப்படையாகக் கொண்டாலும், கைகேயியின் சிறப்பையும் புதிய கோணத்திலிருந்து எடுத்துக் காட்டுகிறது. நாடகத்தின் முதல் பகுதி. சீதைக்குப் பட்டாபிஷேகத் தகவலைத் தோழி சொல்லும்போது, தசரதச் சக்கரவர்த்திக்கு உடல் நல பாதிப்பென்று பதறுகிறாள். குறிப்பிட்ட நாள் காலை, பட்டாபிஷேகம் நிறுத்தப்பட்டது என்னும் செய்தி கிட்டுகிறது.
இராமனுக்குச் சுமை இல்லையென்பதாலும், தசரதர் வானப்பிரஸ்தம் போகமாட்டார் என்பதாலும் சீதைக்கு மகிழ்ச்சிதான்! எதேச்சையாக, தோழி ஒருத்தி மரவுரி கொண்டுவர, விளையாட்டாக அதை அணிகிறாள் சீதை. அங்கு வரும் இராமன், தனக்கு எப்படியிருக்கும் மரவுரி என்று பார்க்க விழைந்து, இன்னொரு மரவுரியைத் தான் அணிகிறான்.