

மகாபாரதத்தில் இராமாயணம் உண்டா என்று கேட்டால், உண்டு என்ற பதில் கிடைக்கும். இரண்டு இதிகாசங்களுக்கும் இடையே ஒரு சுவாரசியத் தொடர்பு உண்டு. மகாபாரதத்தில் இராமாயண சம்பவத்தை நினைவுகூரும் சம்பவமும் காணப்படுகிறது. விதவிதமான கதைகளைப் படிப்பதால் இராமாயணம் நமக்கு, சுவாரசியமாகத்தான் இருக்கிறது.
வனவாசத்தில் இருக்கிறார்கள் பாண்டவர்கள். காம்யக வனத்தில், திருணபிந்து ஆச்ரமத்தில் திரௌபதியை விட்டுவிட்டுப்பாண்டவர்கள் வனத்துக்குள் சென்றுவிடு
கின்றனர். சால்வ நாட்டுக்குப் போகும் வழியில் வனத்தைக் கடக்கும் ஜயத்ரதன், அவள் தடுக்கத் தடுக்க, கதறக் கதற, அவளை அபகரித்துச் செல்கிறான்.
வழியில் தடுத்துப் பாண்டவர்கள் அவளை மீட்கிறார்கள். பின்னர், ஆச்ரமத்துக்குத் திரும்பி ஆசுவாசம் அடைகிறார்கள். மார்கண்டேய ரிஷியிடம் தங்களின் துன்
பத்தைப் பகிர்ந்து கொள்ளும் யுதிஷ்டிரர், வினாக்கள் சிலவற்றையும் எழுப்புகிறார்.
பகவன் தேவர்ஷிணாம், த்வம் க்யாதோ பூத
பவிஷ்யதம்
சம்சயம் பரிப்ருச்சாமி சிந்தி மே ஹ்ருதி
ஸம்ஸ்திதம்
தேவரிஷிகளே, கடந்த காலமும் வருங்காலமும் நன்கறிந்த மகான்கள் நீங்கள். என்னுள்ளத்தில் ஐயம் ஒன்றுண்டு. தங்களிடம் இறைஞ்சுகிறேன், தீர்த்து வையுங்கள்.
த்ருபதஸ்ய ஸுதா ஹ்யோஷா வேதிமத்யாத்
ஸமுத்திதா அயோனிஜா
துருபதன் மகளான இவள் (திரௌபதி), வேதிகையிலிருந்து தோன்றியவள்; (சாதாரணமானவர்கள் போல்) தாய்வயிற்றில், யோனிப் பிறப்பில் தோன்றியவள் அல்லள்.
விதி, காலம் போன்றவை சாதாரண மனிதர்களுக்கு உண்டு. ஆனால், இவளைப் போன்ற தெய்வீகப் பிறவிக்கும் இவையெல்லாம் உண்டா? இவளையும் ஒருவன் அபகரித்துச் செல்லமுடியு மென்றால், அது அநீதி இல்லையா? என் ஒருவனின் விதியால், இத்தனைத் துன்பங்களா? இத்தனை பேருக்கும் என்னா லல்லவா துயரமும் அல்லலும்? இப்படி யெல்லாம் யுதிஷ்டிரர் ஆதங்கப்பட, மார்க்கண்டேயர் விடையிறுக்கிறார்.