

(இ)ராம கதையின் மிக முக்கியமான சிறப்புகளில் ஒன்று – கதாபாத்திரங்களில் பெரும்பாலானவர்கள் தார்மிகவாதிகளாகவும் நன்மை செய்பவர்களாகவும் தவசிகளாகவும் இருப்பார்கள். ஆரம்பத்தில் ஏறுமாறாக இருந்தவர்களானாலும், வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுத் திருந்தி வழி காட்டுவார்கள்.
வால்மீகியோ காளிதாசரோ கம்பரோ காட்டாத பெண்கள் இருவரை கோனபுதரெட்டி தம்முடைய ரங்கநாத ராமாயணத்தில் காட்டுகிறார். இருவருமே திகைக்க வைக்கிறார்கள், வணங்கவும் வைக்கிறார்கள். இருவரிலும் இளமையானவளை முதலில் சந்திப்போம். இவள் சுலோசனா. ஆதிசேஷனின் மகள்; இந்திரஜித்தன் மனைவி.போர்க்களம் சென்ற இந்திரஜித்தன், லட்சுமணனால் அழிக்கப்பட்டுவிட்டான்.
தகவல், இலங்கை அரண்மனையை அடைகிறது. பேரழகியும் பெருங்குண சீலியுமான சுலோசனா, மாமனாரிடம் ஓடி வருகிறாள். தன் கணவனின் உடலை அரண்மனைக்குக் கொணர, தக்க ஏற்பாடுகளை வேண்டுகிறாள். மகன் இறந்த துன்பத்தில் சீதையைக் கொன்றுவிடலாமா என்கிறவரை எண்ணுகிற இராவணன், தன்னால் இது இயலாது என்று மறுதலிக்கிறான். ‘பெண்ணே, உன் கணவனின் உடல், போர்க்களத்தில், எதிரிகளின் பக்கம் கிடக்கிறது; அங்கு சென்று அவர்களிடம் நான் யாசிக்க முடியுமா?’ என்று வாதிக்கிறான்.