லட்சுமண ரேகை | இராம கதாம்ருதம் 17
மீறக் கூடாத நெறிமுறைகள் என்று பொருள்படும்படி பாரத மரபில் ஒரு சொற்றொடர் கூறப்படும். அதுதான் லட்சுமண ரேகை. இதற்கான பின்புலமாக, இராமாயணச் சம்பவம் ஒன்று, மக்கள் புழக்கத்தில் நிலவுகிறது. சில இராமாயணங்களில் இந்த சொற்றொடர் காணப்படாமலும் உள்ளது.
மாரீச மானைத் துரத்திக் கொண்டு போன இராமனுக்கு ஆபத்து என்று சீதை கருதினாள். உதவிக்குச் செல்லும்படி இலக்குவனை ஏவி
னாள். அப்போது, சீதை இருந்த பர்ண சாலையைச் சுற்றிலும் கோடு கிழித்துவிட்டு, அதைத் தாண்டாமல் இருக்கும்படி இலக்குவன் கூறிச் சென்றான்.
தவக்கோலத்தில் வந்த இராவணனுக்கு பிக்ஷை இடக் கோட்டைத் தாண்டினாள். அவளை அவன் தூக்கிச் சென்றான். கிழித்த கோட்டைத் தாண்டினால், கேடு சூழும் என்று இதற்குப் பொருள் விளக்கமும் தரப்படும். வான்மீகத்திலோ, கம்பராமாயணத்திலோ, இலக்குவன் கோடு கிழித்ததாகத் தகவல் இல்லை. அத்யாத்ம ராமாயணமும் இயம்பவில்லை.
துளசிதாசர், இலக்குவன் கோடு கிழித்ததாக நேரடியாகக் கூறவில்லை. ஆனால், இராமனை எதிர்க்க வேண்டாம் என்று ஆலோசனை கூறுமிடத்தில், இராவணனுக்கு மண்டோதரி உரைப்பதாகச் சிறிய குறிப் பொன்றைக் காட்டுகிறார்.
ராமானுஜ லகு ரேக கசாயி, ஸோஉ நஹிம் நாகேஹு அஸி மனுஸாயி – ‘இராமனுக்கு இளையவன், மெல்லிய கோடொன்றை இழுத்தான். அதைக் கூடத் தங்களால் தாண்ட முடியவில்லை; பின்னர் எப்படி அவர்களை எதிர்க்க முடியும்’ என்பதாக மண்டோதரி இடித்துரைக்கிறாள்.
