

ஞானி ஒருவர் ஒரு மன்னரைச் சந்திக்க சென்றார். அந்த மன்னரோ கர்வம் மிகுந்தவர். ஞானியிடம் ‘உங்களுக்கு என்ன வேண்டும்? பொன் வேண்டுமா? பொருள் வேண்டுமா? எது கேட்டாலும் தருகிறேன்” என்று ஆணவத்துடன் சொன்னார் மன்னர்.
ஞானி சிரித்தார். “எனக்கு என்ன வேண்டும் என அதற்கு தகுதியானவரிடம் தானே கேட்க முடியும்” என்று ஞானி கூறியதும் மன்னர் கோபமானார். “என்னுடைய செல்வச் செழிப்பை அறியாமல் பேசுகிறீர்கள்” என்று கர்வம் தெறிக்கும் குரலில் சொன்னார்.
“என்னுடைய இரண்டு அடிமைகளின் அடிமை நீ. உன்னிடம் கேட்க எனக்கு என்ன இருக்க முடியும்?” அமைதியாக சொன்னார் ஞானி. “உங்கள் அடிமைகளுடைய அடிமையா நான்? எவ்வளவு ஆணவம் உங்களுக்கு” என்று மன்னர் கோபப்பட்டார்.
“ஆமாம். என் அடிமைகளில் இருவர் - ஆசை, கோபம். நீ இவர்களுக்கு அடிமை தானே” ஞானி கேட்டார். சிந்தித்த மன்னருக்கு புரிந்தது. ஞானியிடம் மன்னிப்பு கேட்டார். அன்று முதல் மனம் திருந்திய அவர் செய்யும் தான தருமங்களில் அகம்பாவம் விலகி அன்பும், கருணையும் நிறைந்திருந்தன.