

திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோயில் பஞ்சபூதத் தலங்களில் நீர்த்தலமாக உள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றிலும் விசேஷ மகிமை கொண்ட திருவானைக்காவல் அம்பிகை நீரால் அமைத்த மூர்த்தியைக் கொண்ட கோயிலாகும்.
திருவானைக்காவல் கோயிலின் முக்கிய திருவிழாவான மண்டல பிரம்மோற்சவம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் தொடங்கி பங்குனி வரை 40 நாட்கள் நடக்கிறது.
சிதம்பரத்துக்குப்பின் எட்டுத் திக்கு கொடியேற்றத்துடன் தொடங்கி நடக்கும் இத்திருவிழா, முதல் நாள் மண்ணெடுத்தல், விநாயகர், முருகனுக்கு 5 நாள், நால்வருக்கு 3 நாள், கல்யாணசுந்தரருக்கு 3 நாள், சந்திரசேகரருக்கு 6 நாள், சோமாஸ்கந்தருக்கு 10 நாள், பல்லக்குச் சொக்கருக்கு 3 நாள், மௌனவிழா 3 நாள், சண்டிகேசுவரருக்கு 3 நாள், பஞ்சப்பிரகாரம் ஒரு நாள், விடையாற்றி ஒரு நாள், மண்டலாபிஷேகம் ஒரு நாள் என 40 நாட்கள் நடைபெறும்.
பங்குனி சித்திரை நட்சத்திரத்தில் நடைபெறும் பஞ்சப்பிரகார விழாவின்போது கோயிலில் உள்ள 5 பிரகாரங்களையும் பஞ்சமூர்த்திகள் வலம் வருவதால் பஞ்சப்பிரகாரம் என்ற சிறப்பு பெயர் ஏற்பட்டது.