

விவிலியத்தில், ஓரிரு விதிவிலக்குகளைத் தவிர, பெரும்பாலும் சாதாரண மனிதர்களையே கடவுள் பெரும் காரியங்களை செய்யத் தேர்ந்தெடுக்கிறார்.
அவர்களைக் கடவுள் அந்தப் பொறுப்புகளுக்குத் தயார் செய்யும் விதமே அலாதியானது. அவர்கள் முதலில் பயப்படுகிறார்கள். தங்களால் அது முடியாதென்று பல விதங்களில் மறுத்து ஒதுங்கப் பார்க்கிறார்கள். பல சந்தேகங்களைக் கடவுள்முன் வைக்கிறார்கள்.
ஆனால் கடவுள் தந்தையைப் போல், ஓர் ஆசிரியரைப்போல், அவர்களுக்குத் துணிவைக் கொடுத்து, சந்தேகங்களைத் தீர்த்து, பல வழிகளைப் பொறுமையாக சொல்லிக் கொடுத்துத் தயார் செய்கிறார். இஸ்ரவேல் மக்களின் மாபெரும் விடுதலைப் பயணத்தை முன்நின்று நடத்தக் கடவுள் தேர்ந்தெடுத்த மோசேயும் ஒரு சாதரண மனிதர்தான். அவருக்கும், கடவுளுக்கும் இடையில் நடக்கும் உரையாடல் மிக சுவாரஸ்யமானது.
முதலில் இஸ்ரவேல் மக்களிடம் கடவுள்தான் தன்னை அனுப்பியதாக சொல்லச் சொல்கிறார். “அவர்கள் அதை நம்ப மாட்டார்கள்” என்று மோசே கூற, கடவுள், “இருக்கின்றவர் நானே என்பவர் அனுப்பினார் என்று சொல்” என்கிறார். அவர்கள் மோசேயை நம்பும்படி கடவுள் சில அருங்குறிகளைக் காட்டினார். மோசே கையிலிருந்த கோலை கீழே விட்டெறிந்ததும், அது பாம்பாக மாறியது. அதன் வாலைப் பிடித்துத் தூக்கியதும் மீண்டும் கோலானது.