

யாராவது நமக்கு வஞ்சகம் செய்தாலும் ஏதோ காரணத்தோடு அது நடக்க இறைவன் அனுமதித்திருக்கிறார் என்று எடுத்துக் கொண்டால் யார் மீதும் நமக்கு வன்மம் வளராது என்ற படிப்பினையை பைபிள் நமக்குத் தருகிறது. யோசேப்பு தன் சகோதரர்களுக்குத் தானியம் கொடுக்கும்போது இளையவன் பென்யமின்னின் சாக்கில் தன் வெள்ளி கோப்பையையும் மறைவாக வைக்க சொல்லி இருந்தார்.
பின் தன் மேற்பார்வையாளனை அனுப்பி அவர்களைப் பிடித்து, “இவ்வளவு பரிசுப் பொருட்கள் கொடுத்திருந்தும் அரண்மனையிலிருந்து ஒரு வெள்ளிக் கோப்பையை எடுத்து வந்து விட்டீர்களே? உங்கள் சாக்குப் பைகளை சோதனை செய்ய வேண்டும். அப்படி அது அகப்பட்டால் நீங்கள் செய்தது மிகப் பெரிய மோசடி” என்று சொல்லச் சொன்னார்.
யோசேப்பு தன் சகோதரர்களோடு ஏதோ விளையாடுகிறார் என்பது புரிகிறது. ஏனெனில் யோசேப்பு மிகவும் நல்லவர். அவர்கள் அவ்வாறே தேடும்போது வெள்ளிக் கோப்பை இளையவன் பென்யமின்னின் சாக்குப் பையில் அகப்பட்டது. அதனால் பென்யமின்னை அடிமையாக அழைத்துச் செல்ல முடிவெடுத்தார்கள்.