முதல் கிறிஸ்துமஸ் குடில்

முதல் கிறிஸ்துமஸ் குடில்
Updated on
1 min read

கிறிஸ்துமஸ் அலங்கரிப்பில் முக்கிய இடம் வகிப்பது கிறிஸ்துமஸ் குடிலாகும். முதல் கிறிஸ்துமஸ் குடிலை அமைத்த பெருமை இத்தாலியின் அசிசி புனித பிரான்சிஸ் ஆவார்.

அவர் 1223-ம் ஆண்டு இத்தாலியில் உள்ள கிரேக்கியோ என்ற இடத்தில், இயேசுவின் பிறப்பை நினைவுகூர, மாட்டுத் தொழுவத்தின் மாதிரியை உருவாக்கி, அதை உண்மையான பசுக்கள், கழுதைகள் மற்றும் மனிதர்களுடன் உயிர்ப்பித்தார்.

இதுவே முதல் நேரடி பிறப்புக் காட்சி. பின்னர் இதுவே இன்றைய குடில்களாக உருமாறியது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாள் மாலை இயேசுவின் பிறப்பு விழாவை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று முடிவெடுத்து இத்தாலி நாட்டில் உள்ள கிநேச்சியோ என்ற ஒரு சிறிய கிராமத்தைத் தேர்ந்தெடுத்தார் அசிசி புனித பிரான்சிஸ்.

இந்த கிராமத்தின் அமைதி, சாந்தம், எளிமை மற்றும் ஏழ்மை, ஜெபம் செய்யச் தூண்டுவதாகவும் தியானம் செய்ய ஏற்ற இடமாகவும் அமைந்திருந்ததே இதற்குக் காரணம். பிரான்ஸிஸ் அசிசிக்கு ஜான்வெலிட்டா என்று அழைக்கப்பட்ட நெருங்கிய நண்பர் ஒருவர் இருந்தார்.

கிநேச்சியாவில் அவருக்கு சொந்தமான ஒரு மலைப்பகுதியில் நிறைய குகைகள் இருந்தன. எனவே, இவர் வெலிட்டாவிடம், " இவ்வருடம், நான் உம்முடன் சேர்ந்து கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாட நினைக்கிறேன்.

எனவே, பெத்லகேமில் ஆண்டவர் இயேசு பிறந்த மாட்டுக் கொட்டிலை நினைவூட்டும் விதமாக இந்த குகைகளுள் ஒன்றில் ஓர் உண்மையான தீவனத்தொட்டியை அமைத்து, அதில் வைக்கோல் இட்டு, பாலன் இயேசுவுடன் இருந்ததுபோல ஓர் எருதையும் கழுதையையும் அங்கு கட்டி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சிநேச்சியாவில் இருந்த மக்களும் துறவிகளும் தீவட்டிகளுடனும் மெழுகு திரிகளுடனும் வளைந்து, வளைந்து செல்லும் மலைப்பாதையில் மாட்டுத்தொழுவம் அமைக்கப்பட்டிருந்த இடத்தை அடைந்தனர்.

தீவனத்தொட்டியில் கிடத்தப்பட்டிருந்த "குழந்தை இயேசு' கண் விழித்து பிரான்ஸிசைப் பார்த்து புன்முறுவல் பூத்ததை ஜான் வெலிட்டா கண்டதாக "பிரான்ஸிசின் முதல் வாழ்க்கை வரலாறு' என்ற நூலில் கூறப்பட்டிருக்கிறது. பதினான்காம் நூற்றாண்டில் இந்த இடத்தைச் சுற்றி ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டது.

இந்த திருத்தலத்துக்கு இத்தாலி, அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ஸ்பெயின் ஜெர்மனி, கனடா மற்றும் கொரியா நாடுகளிலிருந்து திருப்பயணம் மேற்கொள்வோர் அநேகர்.

குழந்தை இயேசுவின் தீவனத் தொட்டியில் வைக்கப்பட்டிருந்த வைக்கோலை நம்பிக்கையோடு தொட்ட எண்ணற்ற நோயாளிகளும் கால்நடைகளும் கூட குணமடைந்தனவாம். அதன்பின்பு, வருடந்தோறும் குடில் அமைக்கப்பட்டு இயேசு பாலன் பிறப்பு மிகுந்த பக்திப் பெருக்கோடு விமரிசையுடன் எல்லா நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

முதல் கிறிஸ்துமஸ் குடில்
ஹெல்மெட் அணிந்த நவீன ‘சாண்டா கிளாஸ்’

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in