

இந்துமதத்தின் வேதாந்த அத்வைத தத்துவத்தை மேலைநாட்டவரும் அறியும் வண்ணம் கடல் கடந்து ஆங்கில மொழியில் சொற்பொழிவு மற்றும் பயிற்சி வகுப்புகளை உலகம் முழுவதும் நடத்தியவர் சுவாமி தயானந்த சரஸ்வதி. அவரது வழியில் அவரது சீடர்களும் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம், மஞ்சக்குடி கிராமத்தில் 15-8-1930 அன்று பிறந்த நடராஜன் என்கிற இயற்பெயர் கொண்ட தயானந்த சரஸ்வதி சுவாமிகள், சிறுவயது முதலே ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார்.
இளம்வயதில் சென்னையில் தங்கி ஆன்மிக பத்திரிகையாளராக பணி புரிந்தார். இறைத் தொண்டில் முழுமையாக ஈடுபட துறவறம் மேற்கொள்வதே சிறந்த வழியென்று எண்ணி தகுந்த ஆன்மிக குருவை நாடிச் சென்றார்.
அந்த வகையில் 1953-ல் சுவாமி சின்மயானந்தாவை முதன்முதலில் சந்தித்தார். அவரது கொள்கை மற்றும் சேவையால் கவரப்பட்டு சின்மயா மிஷனில் இணைந்து பல்வேறு நிலைகளில் சேவை செய்து தன்னை உயர்த்திக்கொண்டார். 1962-ல் சுவாமி சின்மயானந்தா இவருக்கு சந்நியாச தீட்சை வழங்கி ‘தயானந்த சரஸ்வதி’ என்ற யோகப் பட்டத்தை வழங்கி வேதாந்த தத்துவத்தை போதித்தார்.