

பன்னிரு ஆழ்வார்களுள் பெண் ஆழ்வாரான ஆண்டாள் பாடிய நூல் திருப்பாவை. 30 பாசுரங்களால் ஆன இந்நூல், வைணவ சம்பிரதாயத்தையும் பாவை நோன்பின் சிறப்பையும் எடுத்து இயம்புகிறது. வைணவ பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் 474 முதல் 503 வரையான பாடல்கள் திருப்பாவைப் பாடல்கள் ஆகும்.
மார்கழி மாதத்தில் இளம் பெண்கள் பாவை நோன்பு நோற்பது வழக்கம். அதிகாலைப் பொழுதில் கன்னியர், மற்ற பெண்களையும் துயில் எழுப்பிக் கொண்டு ஆற்றில் நீராடி இறைவனைத் துதித்து வழிபடுவர். இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்ததே ஆண்டாள் பாடிய திருப்பாவை. தற்காலத்திலும் பாவை நோன்பு காலத்தில் இப்பாடல்கள் பாடப்பட்டு வருவது சிறப்பு அம்சமாகும்.
திருப்பாவையின் ஆழத்தையும் அழகையும் நன்கு புரிந்து கொண்டு ரசிக்கும் முயற்சியாக, இன்றைய இளைஞர்களுக்காக அதற்கு ஆங்கிலத்தில் விளக்கம் அளித்து, ‘THIRUPPAVAI – A JOURNEY FROM AWAKENING TO ETERNAL KAINKARYAM’ என்ற நூலை வெளியிட்டுள்ளார் ஆசிரியர் என்.பாலாஜி.