

வேதத்தை ‘ஸ்ருதி’ என்றும், தர்மசாஸ்திரம் உள்ளிட்ட பிற சாஸ்திரங்களை ‘ஸ்மிருதி’ என்றும் சொல்லுவது வழக்கம். நம்முடைய சனாதன தர்மத்துக்கு அடிப்படையே வேதங்கள், சாஸ்திரங்கள், புராணங்கள், இதிகாசங்கள் என்று சொல்லலாம்.
இத்தகைய அறநூல்களை எல்லாம் நன்கு கற்று அறிந்து, கருணை, அன்பின் இருப்பிடமாக இருப்பவர்தான் ஆதிசங்கரர். திருஞானசம்பந்தர் முதலாம் திருமுறையில் பாடிய வண்ணம் (ஊனத்திருள் நீங்கிட வேண்டில், ஞானப்பொருள் கொண்டாடி பேணும்) ஆதிசங்கரர், தர்ம நெறியைக் காத்தருளும் நோக்கில், மக்களின் மன இருளை (அறியாமை) நீக்கி, ஞானத்தை உபதேசிக்க பரமசிவனின் அவதாரமாக கேரள மாநிலம் காலடி எனும் ஊரில் சிவகுரு - ஆர்யாம்பாள் தம்பதிக்கு நல்மகனாக அவதரித்தார்.
சிறுவயதிலேயே வேதம், சாஸ்திரம் உள்ளிட்ட அறநூல்களை நன்கு கற்றுத் தேர்ந்து கோவிந்த பகவத்பாதரிடம் முறையாக சந்நியாசம் பெற்று, வேதத்தின் சாரமான உபநிஷத்தில் கூறப்பட்ட அத்வைத சித்தாந்தத்தைப் போதித்தார். இதனால் சனாதன தர்மம் எனும் இந்து மதத்தில் ஒரு புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டது.