

ஹிஜ்ரி பத்தாம் ஆண்டில் அரேபியப் பெரு வெளியில் மக்கள் பின்பற்ற வேண்டிய பத்து கட்டளைகளை முகமது நபி (ஸல்)அறிவித்தார். மக்களை நல்வழிப்படுத்தி மேன்மைக்கு இட்டுச் செல்லும் அந்தப் பத்துக் கட்டளைகள் இங்கே:
அடுத்த வருடம் இதே நாளில் இதே இடத்தில் உங்கள் மத்தியில் நான் இருப்பேனா என்பது எனக்குத் தெரியாது. இந்த நாளும், இந்த மாதமும், இந்த நகரமும் பரிசுத்தமானவை. அதுபோலவே உங்களது உயிரும், உடைமையும், கண்ணியமும் பரிசுத்தமானவை. இறுதிநாள் வரை அவை பரிசுத்த மாக இருக்க வேண்டும். யாரும் அவற்றில் தலையிடவோ, அபகரிக்கவோ கூடாது.
ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவரது குடும்பத்தினருக்கு அல்ல; அவருக்கே வழங்கப்படும். தந்தை தன் பிள்ளைக்கோ, பிள்ளை தன் தந்தைக்கோ அநியாயம் செய்ய வேண்டாம். தந்தையின் குற்றத்திற்காகப் பிள்ளையோ, பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையோ தண்டிக்கப்படமாட்டார்கள்.
இஸ்லாத்திற்கு முன்பு ஏற்பட்ட கொலைகளுக்கும், கொடுஞ்செயல்களுக்கும், பழிவாங்கும் உரிமை இன்று முதல் ரத்து செய்யப்பட்டுவிட்டது. முதலாவது எனது குடும்பத்தைச் சார்ந்த ரபீஆ இப்னுல் ஹாரிதின் கொலைக்குப் பழிவாங்குவதை நான் மனப்பூர்வமாக நிறுத்திவிட் டேன். அறியாமைக் காலத்தில் நிலவிய பழிக்குப்பழியும் உயிர் போக்கும் மடமையும் இனி கூடாது.
வட்டி வாங்குதல் இனி உங்களுக்குத் தடுக்கப் படுகிறது. கடன் பட்டவர்கள் முதலை மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டால் போதுமானது. எனது பெரிய தந்தையார் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் அவர்களுக்கு வரவேண்டிய வட்டித் தொகையனைத்தும் தள்ளுபடி செய்துவிட்டேன்.
உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமை உள்ளது போல், உங்கள் மீது உங்கள் மனைவியர்க்கும் உரிமையுண்டு. அல்லாஹ்வின் பெயரால் உங்கள் மனைவியரைப் பெற்றதற்குப் பொறுப்பேற்றிருக்கிறீர்கள். நீங்கள் அவர்களுக்கு வேண்டிய உணவு, உடைகளை வழங்கி அன்புடனும் கருணையுடனும் நடந்து கொள்ளுங்கள். இறைவனுக்குப் பயந்து அவர்களது நன்மைகளைப் பேணி வாருங்கள்.
எல்லா முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் சகோதரரே என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரே சகோதரத்துவத்தைச் சேர்ந்தவர்கள் நீங்கள்! ஒருவருடைய பொருளை அவர் மனப்பூர்வமாகக் கொடுத்தாலன்றி, மற்றவர் எடுப்பது தடுக்கப்படுகிறது. அநியாயம் செய்வதிலிருந்து கவனத்துடன் விலகிக் கொள்ளுங்கள்.
எனக்குப் பிறகு எந்த ஒரு இறைத் தூதரும் (நபியும்) இல்லை. உங்களுக்குப் பின் எந்த ஒரு சமுதாயமும் வரப்போவதில்லை. தெரிந்துகொள்ளுங்கள்! உங்களைப் படைத்துக் காக்கும் உங்கள் இறைவனையே வணங்குங்கள். உங்களுக்குக் கடமையாக்கப்பட்ட ஐவேளைத் தொழுகைகளைச் சரிவர நிறைவேற்றி வாருங்கள். ரமலான் (என்னும் புனித) மாதத்தில் நோன்பு நோற்று வாருங்கள். உங்கள் செல்வத்துக்குரிய ஸகாத்தை (கணக்கிட்டு) உங்ளைப் பரிசுத்தப்படுத்துவதற்காக வழங்கி வாருங்கள். உங்கள் இறைவனின் இல்லத்திற்குச் சென்று ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றி வாருங்கள். உங்களை ஆளும் தலைவர்களுக்குக் கட்டுப்படுங்கள்.
உங்கள் இறைவனை மிக விரைவில் நீங்கள் சந்திப்பீர்கள். அவன் உங்கள் செயல்கள் அனைத்தையும் பற்றி விசாரணை செய்வான். எனக்குப் பிறகு நீங்கள் உங்களுக்கிடையே கொலைக் குற்றம் புரிந்து வழிகேடர்களாக மாறிவிட வேண்டாம்.
அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் இறைவன் ஒருவனே! உங்கள் தந்தையும் ஒருவரே!
இறுதியாக அங்கே கூடியிருந்த மக்களைப் பார்த்து, “இறைவனது கட்டளைகளை நான் உங்களுக்கு அறிவித்து விட்டேனா? இறைவன் எனக்களித்த தூதை நிறைவேற்றி விட்டேனா என என்னைப் பற்றி உங்களிடம் விசாரிக்கும்போது, இறுதித் தீர்ப்பு நாளில் என்ன பதில் கூறுவீர்கள்?” என்று கேட்டார்.
'நிச்சயமாக இறைவனது கட்டளைகளை எங்களுக்கு அறிவித்துவிட்டீர்கள்! இறைவன் தங்களுக்கு வழங்கிய தூதுவத்தை முழுமையாக நிறைவேற்றிவிட்டீர்கள்! எங்கள் வாழ்வுக்குத் தேவையான அனைத்து அறிவுரைகளையும் வழங்கி விட்டீர்கள். என்றும் சாட்சியம் கூறுவோம்!' அந்த மாபெரும் மனிதக் கடலிலிருந்து ஒருமுகமாக வான் முட்ட எழுந்தது இந்தப் பேரொலி. இதைக் கேட்ட இறுதித் தூதர் வானத்தை நோக்கி தங்களது திருக்கரங்களை உயர்த்தி,' இறைவா! நீயே இதற்குச் சாட்சி! இறைவா! நீயே இதற்குச் சாட்சி! இறைவா! நீயே இதற்குச் சாட்சி! என்று மும்முறை முழங்கினார்.