ஆன்மிக நூலகம்: பிருந்தாவன் யாத்திரை

ஆன்மிக நூலகம்: பிருந்தாவன் யாத்திரை
Updated on
1 min read

சுவாமி கமலாத்மானந்தர்
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை-4.

நூலாசிரியர் பிருந்தாவனத்தில் 21 நாட்கள் தங்கியிருந்த நேரடி அனுபவத்தின் வாயிலாகவும் அது சார்ந்த ஊர்களில் இருக்கும் பலரும் கூறியவற்றின் அடிப்படையிலும் இந்த நூலை எழுதியுள்ளார். ‘பிருந்தாவன்’ என அழைக்கப்படும் மதுரா, கோகுலம், பிருந்தாவனம், நந்தகாம், பர்ஸானா, கோவர்த்தன மலை ஆகிய பகுதிகளில் சுற்றுலா செல்லும் பக்தர்கள் தரிசிக்க வேண்டிய கோயில்கள் என்னென்ன, ஒவ்வொரு இடத்தின் சிறப்புகள், வரலாற்றுச் சிறப்புகள், பக்தி சார்ந்த அரிய தகவல் பொக்கிஷங்கள் இந்த நூலில் விரவி கிடக்கின்றன.

விஸ்ராம் காட்டில் யமுனைக் கரையில், யமுனை நதிக்கு ஒரு கோயில் இருக்கிறது. இது, ‘பழைய யமுனைக் கோயில்’ என்று அழைக்கப்படுவதைப் பதிவுசெய்துள்ளார் ஆசிரியர். பிருந்தாவன் செல்லும் யாத்ரிகர்கள், பிரசாதமாக நிதுவனத்திலிருந்து மண் எடுத்து வரும் வழக்கம் நீண்ட காலமாக இருக்கிறது. பகவான்  ராமகிருஷ்ணர் பிருந்தாவன் மண்ணைக் கொண்டுவந்து தட்சிணேஸ்வரம் பஞ்சவடியில் தூவி, “இந்த இடம் இப்போது பிருந்தாவன் ஆகிவிட்டது” என்று கூறியதை இந்நூலில் நினைவுகூர்ந்திருக்கிறார் நூலாசிரியர். அற்புதமான ஒளிப்படங்களுடன் அமைந்துள்ள பக்கங்கள் பிருந்தாவனத்தைக் காணும் காட்சி அனுபவத்தைத் தருவதுடன், அந்த இடங்களுக்குச் சென்று பார்க்கவேண்டும் என்னும் எண்ணத்தையும் தூண்டுகின்றன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in